Fire incident in Madurai bus station commercial complex

மதுரை பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் புதியதாக 3 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்த வணிக வளாகம் சுமார் 95 சதவித பணிகள் முடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. அதே சமயம் மீதமுள்ள 5 சதவிகித இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகத்தில் இன்று மாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் தீ விபத்தானது மின் கசிவு காரணமாக ஏற்படவில்லை எனவும், கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பயன்படுத்திய தீக்குச்சி மூலம் அங்கிருந்த குப்பைகளில் தீ பற்றி விபத்து ஏற்பட்டதாகத்தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.