சென்னையை அடுத்துள்ள மாதாவரம் - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்குச் சொந்தமான டயர்கள், டைல்ஸ்கள் மற்றும் அட்டை பாக்ஸ்கள் கொண்ட கொரியர் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த குடோனில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று (06.07.2025) திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது குடோனில் உள்ள பிற பகுதியிலும் பரவி உள்ளது. மேலும் அருகில் பகுதிக்கும் தீயானது பரவியது.
இதனால் மாதாவரம் ரவுண்டானா பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடோனில் இருந்து பயங்கர சத்தம் கேட்பதால் அங்குப் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. அதே சமயம் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் குடோனிற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அதோடு பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து பொதுமக்களையும் காவல்துறையினர் வெளியேற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.