Skip to main content

தீயணைப்பு வீரரை கஞ்சா கடத்த வைத்த ஆன்லைன் சூதாட்டம்! 

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

fire department person arrested in cannabis issue

 

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெருநகரங்கள் தொடங்கி, குக்கிராமங்கள் வரை பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து கஞ்சா போன்ற மாற்றுப் போதைப் பொருட்கள் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. போலீசாரும் முடிந்தவரை பிடித்தாலும் அடுத்தடுத்து கடத்தல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முன்பு கடலோர மாவட்டங்களில் மட்டுமே கடத்தல் கஞ்சா பிடிபட்டு வந்த நிலையில், தற்போது உள்மாவட்டங்களிலும் அடிக்கடி பிடிக்கப்படுகிறது.

 

மதுரை மாவட்டத்திலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு கார்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்து. பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாப்பாநாடு உள்பட பல இடங்களிலும் வாகன சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு காரை ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் பொன்னியின் செல்வன் நிறுத்தி சோதனை செய்தார். அந்தக் காரை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்திருந்த நபர் ஓட்டி வந்தார். சோதனையில் ஒரு பண்டல் கஞ்சா கைப்பற்றப்பட்ட நிலையில், உள்ளே போலீஸ் ஸ்டிக்கரும் கிடந்தது. நிலைமை கைமீறிச் சென்றதும் தப்பி ஓட முயன்ற அந்த நபரைப் பிடித்து விசாரிக்க, காரை ஓட்டி வந்த இளைஞர் ஹரிமுருகன் மதுரை மாவட்டம் கே.புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரர் என்பது தெரிய வந்தது.

 

fire department person arrested in cannabis issue

 

மேலும், அவரைப் பிடித்து விசாரிக்கும்போது, அவருக்கு முன் கிளம்பிய மற்றொரு கார் பட்டுக்கோட்டை நோக்கி சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். தான் பட்டுக்கோட்டை அருகே ஒரு கிராமத்திலுள்ள தோப்பில் கஞ்சா பண்டல்களை இறக்கிவிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்திற்கு மேல் இழந்துவிட்டதால் அதனை மீட்க கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியவர், அவர்களது டீமில் நாட்டைக் காக்க வேண்டியவர்களே கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அதன்பிறகு தனிப்படை போலீசார் ஹரிமுருகனை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

 

மற்றொரு கார், கஞ்சா பண்டல்களுடன் தப்பிச் சென்ற தகவல் மைக் மூலம் அறிவிக்கப்பட்டு, வாகன எண்ணையும் தெரிவித்து மாவட்டம் முழுவதும் அலர்ட் செய்தனர். இந்த அறிவிப்பு வருவதற்கு 5 நிமிடம் முன்பு அந்த கார் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி.யைக் கடந்து சென்றது தெரிய வந்தது. அந்தக் கார் திருச்சிற்றம்பலம் சாலையில் புதுக்கோட்டை நோக்கி பயணிப்பதாகத் தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீசாரும் எச்சரிக்கை செய்யப்பட, அங்கும் வாகன சோதனைகள் தொடங்கியது. வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வாகன சோதனை நடப்பதைப் பார்த்து அந்தக் கார் மாற்று மண் பாதையில் இறங்கி துளுக்க விடுதி முந்திரிக் காட்டுக்குள் சென்றுவிட்டது.

 

fire department person arrested in cannabis issue

 

மறுநாள் சனிக்கிழமை மதியம் மீண்டும் அந்த போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார், ஆவணம் மாரியம்மன் கோயில் முன்புள்ள சாலையில் வந்து பேராவூரணி சாலையில் ஏற முயன்றபோது, சாலையில் ஒரு கார் மற்றும் பைக் நின்றதால் அதற்குமேல் செல்லமுடியாமல் சாலையிலேயே நிறுத்திவிட்டு இருவர் இறங்கி ஓடுவதைப் பார்த்தனர் அப்பகுதி இளைஞர்கள். கைகாட்டியில் வாகன சோதனையில் இருந்த ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் சொல்ல விரைந்து வந்த போலீசார் கார் லாக்கை உடைத்துப் பார்த்தபோது 10 மூட்டைகள் இருந்ததைக் கைப்பற்றி ஆலங்குடி கொண்டுசென்று பிரித்துப் பார்த்தபோது 100 பண்டல்களில் 212 கிலோ கஞ்சா எடுக்கப்பட்டது.

 

தப்பி ஓடியவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கியில் பதுங்கியிருந்த தஞ்சை பிள்ளையார்பட்டி ஆறுமுகம் மகன் அஜித் குமாரை தஞ்சை தனிப்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்” என்கிறார்கள் விவரமறிந்த போலீசார்.

 

அதேபோல புதுக்கோட்டை நகருக்குள் கஞ்சா விற்பனை நடப்பதை அறிந்த எஸ்.பி.யின் சிறப்புப் படை போலீசார் காமராஜர்புரம் 31 ஆம் வீதியில் மணிகண்டன் (எ) கஜினி மணி, மாலையிடு விஜய் ஆகிய இருவரையும், அவர்களிடம் ஒரு கிலோ கஞ்சா, ரூ.2000 பணம், 2 செல்போன்கள், தராசு, பேக்கிங் கவர்கள், 2 பைக்குகளையும் கைப்பற்றியுள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்படி தினம், தினம் கஞ்சா சில்லறை விற்பனை செய்பவர்கள் பலர் பிடிபட்டு வருகின்றனர். ஆனால் கஞ்சா விற்பனையும் குறையவில்லை, விற்பனையாளர்களும் குறையவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.