திருச்சி மாவட்டம், அரியமங்கலம் பகுதியில் இயங்கிவரும் ‘திருப்பதி மரப்பட்டறை’ நிறுவனத்தில் நேற்று (20.06.2021) இரவு எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
தீ மளமளவென பரவியதைப் பார்த்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மரப்பட்டறையில் ஏற்பட்ட தீ முழுமையாக கடை முழுவதும் பரவி, உள்ளே அடுக்கிவைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அருகில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் செயல்பட்டுவரும் நிலையில், அங்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதன்மூலம், பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்துவருகின்றனர்.