Fire accident in trichy market

திருச்சி காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை ரோட்டில் ரங்கராஜ் என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார். மாநகராட்சிக்குச் சொந்தமான கடையை அவர் ராஜா என்பவருக்கு உள் வாடகைக்கு விடுவதற்காக ரூ. 1 லட்சம் பெற்றுள்ளார். இந்நிலையில், ரங்கராஜனின் சகோதரர்கள் அவருக்குத்தெரியாமல் ராஜாவிடம் 5 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதற்கிடையே கடையை காலி செய்யச் சொல்லி ரங்கராஜ் கூறியபோது ராஜா முழுத்தொகையும் கேட்டுள்ளார். ஆனால் ரங்கராஜ் ஒரு லட்சம் மட்டுமே தருவதாகக் கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரங்கராஜ் ராஜாவைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆத்திரம் தீராமல் தொடர்ந்து ரங்கராஜ், ராஜாவை பெட்ரோல் எடுத்து ஊற்றி தீ வைக்க முயன்றார். அப்பொழுது இன்னொருவர் அவரைத்தடுத்து சட்டையைப் பிடித்துப் பின்பக்கமாக இழுத்தார். இதில் எதிர்பாராத விதமாக ரங்கராஜ் உடலில் பெட்ரோல் கொட்டியதோடு இடது கையிலிருந்த அவரது லைட்டரும் அழுத்தி பற்றிக் கொண்டது. இதனால்அவர் உடலில் தீப்பற்ற வலிதாங்காமல் அவர் அங்கும் இங்கும் ஓடினார். இதனால் காந்தி மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் அங்கிருந்தவர்கள் அவர் மீது படர்ந்த தீயை அணைத்தனர். மேலும், காவல்துறைக்குத்தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Advertisment