உணவகத்தில் தீ! 

Fire accident in puthukottai hotel

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் அறந்தாங்கி சாலையில் சில வருடங்களுக்கு முன்பு ஆவணம் கிராமத்தைச் சேர்ந்த சையது சுல்தான் என்பவரால் உணவகம், காய்கறி, மீன், கறி, பழங்கள் விற்பனை மையமாக தொடங்கப்பட்டு தற்போது உணவகம் மட்டும் செயல்பட்டு வருகிறது.

இன்று காலை உணவகத்தின் சமையல் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு புகைப்போக்கியில் அதிக வெப்பம் காரணமாக ஓட்டை ஏற்பட்டு அதிலிருந்து தீ வெளியேறி உணவகத்தின் மேல் கூரையில் தீ பற்றிய சிறிது நேரத்தில் முழுமையாக தீ பரவி உணவகம் பற்றி எரிந்தது. உணவகத்தில் அனைத்து பொருட்களும் மர பொருட்களாக இருந்ததால் தீ வேகமாக பரவியது.

உணவக ஊழியர்கள், பொது மக்கள் ஆகியோர் தீயை அணைக்க முயன்றும் முடியாத நிலையில் கீரமங்கலம் தீயணைப்பு வாகனம் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றது. ஆனால் அதற்குள் உணவகத்தின் பொருட்கள் எரிந்து நாசமானது. மோட்டார் சைக்கிள் உட்பட ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் என்கின்றனர். தீயணைப்பு துறையினர் முயற்சியால் மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

puthukottai
இதையும் படியுங்கள்
Subscribe