hospital fire; Minister I. Periyasamy inquired about the welfare of the rescued

திண்டுக்கல் என்ஜிஓ காலனி அருகே இயங்கி வரும் 'சிட்டி' என பெயர் கொண்ட தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் இரவு 9 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தம் நான்கு மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனைஎன்பதால் பல இடங்களுக்கும் தீ பரவியுள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அந்த பகுதியில் அணிவகுத்தது. மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். இதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Advertisment

hospital fire; Minister I. Periyasamy inquired about the welfare of the rescued

வெளியான தகவலின் அடிப்படையில் இதுவரை இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள், ஒரு சிறுவன், ஒரு குழந்தை என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விபத்து நடந்த மருத்துவமனைக்கு விரைந்தார். தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த ஐ.பெரியசாமி மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 28 பேரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி ''முதல்வர் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவர்களுக்கும் அரசு உறுதுணையாக இருந்து நிவாரணங்களை வழங்கும்' என தெரிவித்தார்.

அப்பொழுது பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, துணைச் செயலாளர் பிலால், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், கிழக்குப் பகுதி செயலாளர் ராஜேந்திர குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

Advertisment

இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில் 28 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்கள் விபரம்: தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (தாய்) மணிமுருகன் (மகன்), தேனியைசேர்ந்த சுருளி- சுப்புலட்சுமி (கணவன் மனைவி) , என்ஜிஓகாலனியை சேர்ந்த ராஜசேகர், அவரது மகள்.