Financial transactions of private educational institutions cannot be ordered through the state treasury! - High Court denies!

Advertisment

தனியார் கல்வி நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளை,அரசுக் கருவூலம் மூலம் மேற்கொள்ளும்படிதமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது எனசென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லை என்பதால், தனியார் கல்வி நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளை, அரசுக் கருவூலம் மூலம் மேற்கொள்ள உத்தரவிடக் கோரி, அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கே.எம்.கார்த்திக், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், ‘மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள், ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்களைக் கண்காணிக்காததால், 50 சதவீத லாபம், பள்ளி மற்றும் கல்லூரி அறங்காவலர்களின் கைகளுக்குச் செல்கிறது.தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு எந்தக் கட்டணச் சலுகையும் வழங்கப்படுவதில்லை. தனியார் பள்ளி, கல்லூரிகளில்வருமான வரித்துறையினர் மூலம் தணிக்கை செய்து, கட்டண விகிதங்களைக் குறைக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

Advertisment

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘தனியார் கல்வி நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளை அரசுக் கருவூலம் மேற்கொள்வது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், இது சம்பந்தமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது’ என மறுத்துவிட்டது.

அதேசமயம், கட்டண விகிதங்களைக் குறைப்பது தொடர்பாக,மனுதாரர், சம்பந்தப்பட்ட அரசுத்துறைக்கு மனு அளிக்கலாம் என்றும்,அதை அரசு பரிசீலிக்கலாம் எனவும் கூறிய நீதிபதிகள்வழக்கை முடித்து வைத்தனர்.