Skip to main content

கரோனோவைவிட பெரிய அதிர்ச்சி... சீட்டு நடத்தி ரூ.1 கோடிக்கு மேல் மோசடி... ஆத்திரப்படும் பொதுமக்கள்...

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

 

 

கரோனோ வைரஸ் பிரச்சனையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், சீட்டு நடத்தியவர் ஒருவர் திடீரென கம்பெனி திவால் ஆனதாக அறிவித்த நிலையில் தன் எதிர்கால நலனுக்காகச் சேமிப்புக்காகக் கொடுத்த பொதுமக்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

 

திருச்சி மலைக்கோட்டை ஜான்தோப்பை சேர்ந்த மணி என்பவர் நாகநாதர் கோவில் அருகில் பழக்கடை நடத்தி வருகிறார். அத்தோடு நிதி நிறுவனமும், அதில் கடந்த பல வருடங்களாக ஏலச்சீட்டும் நடத்தி வருகிறார். இவர் நடத்தி வரும் ஏலச்சீட்டில் கருவாட்டு பேட்டை, ஜான் தோப்பு, கமலா நேரு நகர், வடக்கு தாராநல்லூர், சின்ன செட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பணம் செலுத்தி உள்ளனர்.
 

இந்த நிலையில் மணியிடம் சீட்டு கட்டியிருந்த மயில் சரவணன் என்பவர் தனது நிலுவைத் தொகையைக் கேட்டுள்ளார். அதற்கு மணி, நிலுவைத் தொகையான 70,000 ரூபாயைத் தற்போது தர முடியாது. தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டதால் எனக்கு வெளியில் இருந்து ரூபாய் ஒரு கோடிக்கு மேல் பணம் வர வேண்டி உள்ளது. எனக்குக் கொடுக்க வேண்டிய முஸ்தபா என்பவர் மீது வழக்கு போட்டுள்ளேன். இனி நீதிமன்றம் வசூல் செய்து உங்களுக்கு பணம் செட்டில் செய்யப்படும் என்று நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

 

tiruchi

 

 

 


 

 

 

இந்த நோட்டிஸைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மயில் சரவணன் சீட்டு நடத்திய பழக்கடை மணியிடம் சீட்டு போட்டு ஏமாந்தவர்களை அழைத்துக்கொண்டு அவரிடம் நியாயம் கேட்க செல்ல அந்த பகுதியே பரபரப்பு அடைந்தது. சீட்டு நடத்திய பழக்கடை மணியோ பணம் திவால் ஆயிடுச்சு என்று சொன்னவுடன் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மணி வீட்டை முற்றுகையிட ஆரம்பித்தனர். அந்த இடமே போர்க்களம் போல் ஆனதால் தகவல் அறிந்த கோட்டை போலீசார் விரைந்து சென்று பழக்கடை மணியைப் பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு வந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

 


போலீசார் விசாரணையில், 100-க்கும் மேற்பட்டவர்கள் சீட்டுப் பணம் செலுத்தி ஏமாந்ததும், சீட்டு நடத்தியவர் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததும் தெரியவந்தது. இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் விசாரணை நடத்தி வருகிறார். 
 

ஏமாந்தவர்களின் பட்டியல் 100க்கு மேலும் பணத்தின் மதிப்பு கோடிக்கணக்கிலும் செல்வதால் போலிசாரும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.