"சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி"- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு!

publive-image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21/11/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம், நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் இன்று (21/11/2021) அதிகாலை நவல்பட்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூலாங்குடி காலனியில் இரவு ரோந்து பணியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு திருடர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் போது துரத்திப் பிடித்துள்ளார். இச்சம்பவத்தின் போது அந்த மர்ம நபர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையின் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பூமிநாதன் சிறப்பு உதவி ஆய்வாளர், ரோந்து பணியிலிருக்கும் போது மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன். இக்கொடிய சம்பவத்தால் உயிரிழந்த பூமிநாதன், சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு முதலமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Announcement chief minister Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe