
மஞ்சுவிரட்டில் கண்டபடி காளைகளை அவிழ்த்துவிட்டதால் காளைகள் முட்டித் தூக்கி வீசியதில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் நவநீதகிருஷ்ணன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த காவலருக்கு தமிழக அரசு நிவாரணம் அளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் கல்லூர் கிராமத்தில் உள்ள அரியநாயகி மாரியம்மன் கோவில் மது எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு செம்முனீஸ்வரர் கோவில் வளாகத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி உள்பட பல மாவட்டங்களிலிருந்தும் சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

தொடக்கத்தில் வரிசையாக அவிழ்க்கப்பட்ட காளைகள் பின்னர் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏராளமான காளைகள் பார்வையாளர்கள் நிற்கும் பக்கங்களிலும் ஓடியது. வரிசையாக காளைகளை அவிழ்க்க வேண்டும் என்று அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் கூட்டத்திற்குள் வேகமாகஓடிய ஒரு காளையை பார்த்து இளைஞர்கள் அங்குமிங்குமாக ஓடிய நிலையில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த மீமிசல் காவல் நிலைய காவலர் நவநீதகிருஷ்ணன்(32) அந்த இடத்திலிருந்து தப்பி ஓட முயலும்போது வேகமாக வந்த காளை குத்தி தூக்கி வீசியது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது.
அறந்தாங்கி எல்.என்.புரத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி சபரி அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப்பணி செய்கிறார். இருவரும் 2013ல் போலீஸ் வேலைக்கு வந்தவர்கள். இவர்களுக்கு மிதுன் சக்கரவர்த்தி (8), கீர்த்திவாசன் (5) என்ற இரு மகன்கள் உள்ளனர். பாதுகாப்பிற்குச் சென்ற காவலர் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மஞ்சுவிரட்டில் மாடு முட்டி உயிரிழந்த காவலர் நவநீதகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, பொது நிவாரண நிதியிலிருந்து காவலர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Follow Us