Skip to main content

பிரியாணி சண்டையால் ஏற்பட்ட கைக்கலப்பு; கத்திக்குத்துப்பட்ட தாத்தா!! 

Published on 19/06/2021 | Edited on 19/06/2021
fight started reason of biryani; Screaming Grandpa

 

விழுப்புரம் மாவட்டம் மைலம் அருகில் உள்ளது பாதிராப் புலியூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தொப்பளான். இவரது தனது மகன் முருகனுக்கு திருமணம் செய்து வைத்து எதிர் வீட்டில் தனிக்குடித்தனம் வைத்துள்ளார். எதிர் எதிர் வீட்டில் தந்தையும் மகனும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே ஊரில் உள்ள உறவினர் வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழா முடிந்ததும் விழாவுக்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் சிக்கன் பிரியாணி சமைத்து பரிமாறி உள்ளனர். விழா குடும்பத்தினர்  நெருங்கிய உறவினர்கள் என்பதால் முருகனின் தந்தை தொப்பளான் அந்த குடும்பத்தினருடன் இணைந்து பிரியாணி சமையல் ஏற்பாடுகளை செய்து விருந்தில் அமர்ந்து சாப்பிட்டவர்களுக்கு பிரியாணி பரிமாறிக் கொண்டிருந்தார்.

 

விருந்தினர்கள் அனைவரும் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்த விருந்து பந்தியில் தொப்பளான் மகன் முருகனும் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளார். அப்போது தொப்பளான் பலருக்கும் பிரியாணியுடன் சிக்கன் சேர்த்து பரிமாறிக் கொண்டு இருந்தார். அதில் சாப்பிட்டுக்கொண்டிருந்த முருகன் தனக்கு சிக்கன் கறி வைக்கவில்லை என்று தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர். விருந்து முடிந்த பிறகு தொப்பளான் தன் வீட்டிற்கு வந்துள்ளார். விருந்து பந்தியில் தனக்கு சிக்கன் கரி வைக்காத கோபம் தணியாமல் இருந்த முருகன் தந்தை வீட்டுக்கு வந்ததும் ஏன் எனக்கு சிக்கன் கறி வைக்கவில்லை என்று கேட்டு வீட்டிலும் தகராறு செய்துள்ளார். ஒருவருக்கு ஒருவர் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்துக்கொண்டிருந்த முருகனின் தாத்தா பெருமாள், பேரனுக்கு மகனுக்கும் இடையே சென்று சண்டையை விலக்கி விட்டுள்ளார்.

 

இருவருக்குமிடையே அவர் சமரசம் செய்துகொண்டு இருந்தபோது கோபத்தில் இருந்த முருகன் அங்கு கிடந்த கத்தியை எடுத்து தாத்தாவின் வயிற்றில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்த முதியவர் பெருமாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த மயிலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தாத்தாவை கத்தியால் குத்திய பேரன் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கன் கறி போடாத சண்டையில் தாத்தாவை கத்தியால் குத்திய பேரனின் செயல் குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.