மதுபோதையில் பள்ளிக்கு வருவதோடு, மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளி ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள முளுவி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு முளுவி மற்றும் சுற்றுவட்டார மலைக்கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் ஹரிஹரன் என்பவர் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மதுபோதையில் பள்ளிக்கு வருவதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் சேலம் மாவட்டக் கல்வித்துறை அலுவலர்கள் நேரில் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதில் ஆசிரியர் ஹரிஹரன் மீதான புகார் உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சேலம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ், ஆசிரியர் ஹரிஹரனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் தரப்பில் விசாரித்தபோது, ''பட்டதாரி ஆசிரியர் ஹரிஹரன், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும், வகுப்புக்கும் செல்லாமல் ஆசிரியர்கள் அறையிலேயே தூங்கிக் கொண்டு இருப்பார் என்றும் விசாரணையில் மாணவர்கள் கூறுகின்றனர். குடிபோதையில் சில மாணவிகளிடம் அவர் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் விசாரித்தபோது, அவரிடமும் தகராறு செய்துள்ளார். இதனால் ஆசிரியர் ஹரிஹரன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட உள்ளது'' என்றனர்.