Skip to main content

“நான் காளி மாதா, என்னை கைது செய்து தவறு செய்து விட்டீர்கள்..” - காவல் நிலையத்தில் ஆக்ரோஷமான பெண் சாமியார்! 

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

female preacher arrested by Dindigul Nilakottai police

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் தவயோகி சாமியார் ஒருவர் கொடுத்த மோசடி புகாரில் பிரபல பெண் சாமியார் கைது செய்யப்பட்டார்.

 

நிலக்கோட்டை அருகே வீலி நாயக்கன்பட்டி கிராமத்தில் தவயோகி ஞானதேவபாரதி என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த பவித்ரா (என்ற) காளிமாதா என்னும் பெண் சாமியார் ஆசிரமத்தோடு தன்னை தொடர்பில் இணைத்துக் கொண்டார். சாமியார்கள் இருவரும் தேடிவரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் மற்றும் உதவிகள் வழங்கி வந்த நிலையில், ஞான பாரதிக்கும் பவித்ராவுக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது. 

 

பவித்ரா, ஆசிரம சொத்துக்களை அபகரிக்க பார்க்கிறார் என ஞானதேவபாரதி குற்றம் சாட்டினார். ஞானதேவபாரதி, தன்னிடம் பணத்தை பிடுங்கிக் கொண்டார் என பவித்ரா குற்றம்சாட்டினார். இதனையடுத்து ஆசிரமத்தில் பல்வேறு சர்ச்சைகளும் அடிதடிகளும் நடைபெற்றன. இருவரும் மாறி மாறி நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த வண்ணம் இருந்தனர். 

 

இந்நிலையில் கடந்த வருடம் ஆசிரமத்தில் புலித்தோல் பதுக்கி வைத்திருப்பதாக பவித்ரா கொடுத்த புகாரில் வனத்துறையினர் ஆசிரமத்தில் சோதனையிட்டு அங்கிருந்து புலித்தோலை கைப்பற்றி ஞானதேவபாரதி மீது வழக்குப்பதிவு செய்து உதவியாளர் ஒருவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து ஆசிரமத்தில் மேற்பார்வையாளராக இருக்கும் மற்றொரு பெண் சாமியாரான அருள்மணி, பவித்ரா ஆசிரமத்துக்குள் புகுந்து 30 பவுன் நகை, ஐந்து லட்ச ரூபாய் பணம் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

 

female preacher arrested by Dindigul Nilakottai police

 

பவித்ரா, தன்னை ‘அகில இந்திய ஹிந்து யுவ மேர்ஷா தர்மாச்சார்யா’ அமைப்பை சேர்ந்தவர். எனக்கு மத்திய அரசு பாதுகாப்பு இருக்கிறது எனக் கூறி காவல்துறை தன்னை நெருங்கா வண்ணம் பார்த்துக் கொண்டார். மேலும் தமிழகம் முழுவதும் தான் காளிமாதா என கூறி தமிழக அரசியல் வி.ஐ.பி.கள் மற்றும் காவல்துறை, அரசுத்துறை அதிகாரிகள் என பலரும் தனது பக்தர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டார். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிக்குச் சென்று அருள்வாக்கு கூட்டம் நடத்தி பிரபலமானார். 

 

இந்நிலையில் தொடர் புகார் எதிரொலி காரணமாக பெண் சாமியார் மீது இருந்த மோசடி வழக்கை கையில் எடுத்த போலீசார், திண்டுக்கல்லில் இருந்த பவித்ராவை திடீரென கைது செய்தனர். காவல் நிலையம் அழைத்துவரப்பட்ட பவித்ரா, விசாரணையின் போது போலீசார் மத்தியில், “நான் காளி மாதா, என்னை கைது செய்து; தவறு செய்து விட்டீர்கள். காளி உங்களைத் தண்டிப்பாள்” என ஆவேசமாக கூறி பிரார்த்தனை செய்தார். இதனைத் தொடர்ந்து பவித்ராவின் உடனிருந்த அவர் தங்கை ரூபவதியும் கைது செய்யப்பட்டார். ஆண் சாமியார் கொடுத்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சாமியார் பவித்ரா நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நிலக்கோட்டையில் பிரபல பெண் சாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.