
காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியிருக்கும் ஏரியாவுக்கு உட்பட்டது அந்தக் காவலர் குடியிருப்பு. அங்கு ஏ, பி, சி, டி, இ என 5 அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. இங்குக் குடியிருக்கும் பெண் காவலர் ஒருவரது வீட்டின் கதவு பின்னிரவு 2 மணிக்கு படபடவென்று தட்டப்பட்டது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்த பெண் காவலரும், அவருடைய குடும்பத்தினரும் இந்த நேரத்தில் யார் கதவைத் தட்டுவது என்ற சந்தேகத்துடன் கதவைத் திறந்தனர்.
அப்போது, அரை குறை உடையுடன் உச்சக்கட்ட போதையில் இருந்த அந்தத் திருநங்கை, “அவனை வெளியே அனுப்பு.. என்னைய கூட்டிட்டு வந்து பணம் தராமல் ஏமாற்றுவானா அவன்…?” என்று ஆபாசமாகத் திட்டியிருக்கிறார். கதவைத் திறந்த பெண் காவலர் குடும்பத்தினருக்கோ குழப்பம். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அந்தத் திருநங்கை கேட்கவே இல்லை. “நீங்க எல்லாரும் போலீஸ் பேமிலின்னு எனக்கு தெரியும். அதனால் அவனை உள்ளே பூட்டி வச்சிட்டு என்னைய ஏமாத்துறீங்க. உங்களை சும்மா விடமாட்டேன். எங்கள் திருநங்கை கூட்டத்தைக் கூட்டி வந்து பஞ்சாயத்து பண்ணுவேன்னு…” சொன்ன அவர், அந்த இடத்திலேயே ஆடைகளைக் களைந்து நிர்வாணமாகத் தரையில் அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்.
இனி பேசி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த பெண் காவலர், உடனே காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு, அன்றிரவு ரோந்துப் பணியில் இருந்த போலீஸாரை வரவழைத்து, திருநங்கையை அவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், காவலர் குடியிருப்பில் “டி” பிளாக்கில் 2வது நம்பர் வீட்டில் குடியிருக்கும் காவலர் ஒருவர், திருநங்கையை இரவு நேரத்தில் அழைத்து வந்துள்ளார். பழகிப் பேசிவிட்டு, திருநங்கையை வெளியே அழைத்துச் சென்று, பேசிய தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். மித மிஞ்சிய மதுபோதையில் இருந்த திருநங்கை, அவராகவே காவலர் குடியிருப்புக்கு வந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட “டி” பிளாக் எதுவென்று தெரியாமல், “ஏ” பிளாக்கில் உள்ள 2ஆம் நம்பர் வீட்டின் கதவைத் தட்டி, ரகளை செய்துவிட்டார். இந்தப் பிரச்சனையை மேலிடத்திற்குத் தெரியாமல் லோக்கல் போலீஸார் சாமர்த்தியமாக மூடி மறைத்துவிட்டனர். அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட தரப்போ, “இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு யார் செய்தாலும், விடக்கூடாது. பொதுமக்கள் செய்ற தப்பை, போலீஸார் செய்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”. என வலியுறுத்தி உள்ளனர். திருநங்கை அலப்பறை செய்த குடியிருப்புக்கும், காவல் நிலையத்திற்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 30 மீட்டர் தான் என்பது ஹைலைட்.