
மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகையன் - சுமதி தம்பதியினர். இவர்களது மகள் அபிநயா(29). நாகை மாவட்ட ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்த இவர் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூல அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்தியுடன் சுழற்றி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
அந்த வகையில் வழக்கம் போல் சனிக்கிழமை இரவு பணிக்கு வந்த அபிநயா நேற்று காலை 6 மணியளவில் துப்பாக்கியுடன் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் சக காவலர்கள் அபிநயாவை தேடியுள்ளனர். அப்போது, திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சக காவலர்களை சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, அபிநயா கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்து கிடந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி.அருண் கபிலன் விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் காவலர் அபிநயா தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனிடையே அபிநயாவின் உடலை கைப்பற்றி போலீஸ் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த நாகூர் போலீசார் காவலர் அபிநயா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.