Skip to main content

பரோட்டா கடையில் உணவு வழங்கிய பெண் எம்.எல்.ஏ.! -உதவியதே உபத்திரவமானது!

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

 Female MLA who provided food issue

 

கரோனா ஊரடங்கின்போது, பொதுமக்களுக்கு உணவளிப்பது தமிழகத்தில் பரவலாக நடந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரிலும்,   ‘அதிமுக எம்.எல்.ஏ. சந்திரபிரபா சார்பில், பேருந்து நிலையம் அருகிலுள்ள சுரேஷ் ஹோட்டலில், தினமும் மதியம் 1 மணிக்கு விலையில்லா பார்சல் உணவு வழங்கப்படும்’ என்று அறிவித்தனர். 


சுரேஷ் ஹோட்டல் என்றாலே ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களுக்கு பரோட்டாவும், மட்டன், சிக்கன் போன்ற நான்-வெஜ் அயிட்டங்களும்தான் நினைவுக்கு வரும். அந்த ஹோட்டலில், இலவசமாக  ‘பார்சல் உணவு’ என்றதும், மக்கள் பரபரப்பானார்கள். பரோட்டாவா? பிரியாணியா? என்னவோ தரப்போகிறார்கள் என பசியோடு,  துணிப்பை, கூடை, தூக்குச்சட்டி என கண்ணில் பட்டதை கையில் எடுத்துக்கொண்டு, ஆண்களும், பெண்களும், முதியவர்களும், சிறுவர்களும் சுரேஷ் ஹோட்டல் முன்பாக குவிந்தனர்.

 

 Female MLA who provided food issue



முதலில் பொறுமையாக வரிசையில் நின்ற மக்கள், போகப்போக சமூக இடைவெளியோ, கட்டுப்பாடோ இல்லாமல் முண்டியடித்தனர். அங்கு தந்ததென்னவோ சைவ சாப்பாடுதான். ஆனாலும், மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு யாரும் இல்லை.  கரோனா பரவலை தடுப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என்று மத்திய அரசும், மாநில அரசும் மக்களிடம் நாள்தோறும் வேண்டுகோள் விடுத்துவரும் நிலையில், திருவிழா நாட்களில் கூட்டம் சேர்வதுபோல், பரோட்டா கடைக்கு முன்னால் மக்கள் திரண்டவுடன், உணவோடு கரோனாவையும் பார்சல் கட்டி வாங்கிச் செல்வது போல் அல்லவா ஆகிவிட்டது? என்று சமூக ஆர்வலர்கள் பதறினார்கள். 


‘தமிழகத்தின் சிறந்த பெண் எம்.எல்.ஏ.’ என, திருவனந்தபுரம் ரோட்டரி கிளப் கவுரவிக்க, கேரளா சென்று அந்த விருதினைப் பெற்ற சந்திரபிரபா எம்.எல்.ஏ.விடம் “உணவு வழங்குவதாகச் சொல்லி, கரோனா பரவும் நேரத்தில் மக்கள் நெரிசலை ஏற்படுத்தியது ஒரு எம்.எல்.ஏ.வுக்கு அழகா?” என்று அலைபேசியில் தொடர்பு கொண்டு தொகுதி மக்கள் கேட்க, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வரை இந்த விவகாரம் போனது.  ‘இனி இங்கு உணவு வழங்கக்கூடாது’ என்று சுரேஷ் ஹோட்டலை எச்சரித்து மூடச் சொல்லிவிட்டது,   ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை. 

‘உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் பண்ணாதே!’ என்பார்கள். சந்திரபிரபா எம்.எல்.ஏ. விஷயத்திலோ, உதவியதே பெரும் உபத்திரவம் ஆகிவிட்டது. 
  
  

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.