மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நடந்த பாலியல் விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்திடம் மிரட்டி பேரம் பேசியதாக அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சங்கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை நகரத்தில் இயங்கி வரும் சில்வர் ஜீப்ளி மெட்ரிக் பள்ளியின் இயற்பியல் ஆசிரியரான சீனிவாசன், அதே பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்த மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து, போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தநிலையில் மயிலாடுதுறை மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சங்கீதா பணியில் அலட்சியமாக இருந்ததாகவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை மெத்தனமாக விசாரித்ததாகவும், இதனால் பொதுமக்கள் அதிருப்தியடைந்து தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் டிஐஜி கயல்விழி.
இதுகுறித்து விவரம் அறிந்த அதிகாரிகளிடம் விசாரித்தோம், "ஆய்வாளர் சங்கீதா மீது ஏராளமான புகார்கள் உண்டு. அடாவடியாக பணம் வாங்குவதில் கைதேர்ந்தவர். ஒயிட் பேப்பரோ, நியூஸ் பேப்பரோ வாங்கி வரச் சொல்லி அதில் பணத்தை வைத்து ஜீப்பில் வைக்கச் சொல்வது இவரோட ஸ்டைல். இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள சில்வர் ஜீப்ளி பள்ளியின் ஆசிரியர் சீனிவாசன் ஓரினச் சேர்க்கைக்கு மாணவர்களை அழைத்த வழக்கில் அந்தப் பள்ளி நிர்வாகத்திடம் ஆரம்பத்தில் அரை லகரம் வாங்கினாராம். விசாரணையில் இருபது மாணவர்களுக்கு மேலே இருப்பதாக இருபது இன்ட் அரை லகரம் எனக் கணக்கிட்டு கேட்டாராம், தரவில்லை என்றால் "வழக்கில் உங்களையும் சேர்த்து விடுவேன்" என்று மிரட்டினாராம். ஓரளவு பணம் கொடுத்த பள்ளி நிர்வாகத்தை, மீண்டும் மீண்டும் பணம் கேட்டு ஆய்வாளர் சங்கீதா துளைத்தெடுக்கவே தஞ்சை டி.ஐ.ஜி கயல்விழியிடம் புகார் தெரிவித்துள்ளனர். கூடுதலாக நிதி நிறுவன அதிபர் ஒருவர் மூலம் அழுத்தம் கொடுத்து தற்போது இன்ஸ்பெக்டர் சங்கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்” என்கிறார்கள்.