ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் காப்பகமாக உள்ளது. இந்த வனத்தில் யானைகள், மான்கள், புலி, சிறுத்தை, கரடி, காட்டு எருமைகள், செந்நாய், என பல வகை வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
விலங்குகள் மோதல், விபத்து, வயோதிகம், உடல் நலிவுறுவது உள்ளிட்டவற்றால் பல வன விலங்குகள் அவ்வப்போது இறந்து விடுகிறது. செம்மன் குட்டை என்ற வனப்பகுதியில் வனவர் பெர்னால்டு, மாவட்ட வன அலுவலர் அருள்லால் ஆகியோர் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் 14ஆம் தேதி ரோந்து சென்றுள்ளனர்.
அப்போது அந்த வனப்பகுதியில் ஒரு இடத்தில் யானை ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அந்த இடத்துக்கு வந்து, இறந்து கிடந்த யானையை அந்த இடத்தில் வைத்தே பிரேதப் பரிசோதனை செய்தனர். இதில் இறந்தது பெண் யானை என்றும், வயது முதிர்வு காரணமாக இறந்திருக்கலாம் அல்லது உறவுக்காக ஆண் யானை தாக்கியதால் இறப்பு நேர்ந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.