Skip to main content

எலி மருந்து சாப்பிட்டு வங்கி பெண் அதிகாரி தற்கொலை

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

Female bank officer passes away salem

 

சேலத்தில், தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்த வங்கி பெண் அதிகாரி, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

தர்மபுரி குமாரசாமிப்பேட்டையைச் சேர்ந்தவர் அனிதா (30). சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். சமீபத்தில்தான் அவர் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு மாறுதல் பெற்று வந்தார். 20 நாட்களுக்கு முன்பு அழகாபுரம் காட்டூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து வங்கிப் பணிக்குச் சென்று வந்தார்.  

 

இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி அனிதா திடீரென்று எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அவருடைய பெற்றோர் மகளை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உடல்நிலை மோசமான நிலையில்,  மீண்டும் அனிதாவை தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அனிதா நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சேலம் அழகாபுரம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

தற்கொலை செய்துகொண்ட அனிதா சேலத்திற்கு இடமாறுதல் பெற்று வருவதற்கு முன்பு, தர்மபுரியில் உள்ள வங்கி கிளையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த ஆசிரியருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அதில் ஒருவர் மருத்துவம் படித்து வருகிறார்.  இதையறிந்த அந்த ஆசிரியரின் மனைவி, கணவரை கண்டித்துள்ளார். அதை பொருட்படுத்தாத ஆசிரியரும் அனிதாவும் தொடர்ந்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

 

இதனால் பொறுமை இழந்த ஆசிரியரின் மனைவி, என் கணவரை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி, தர்மபுரி காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆசிரியரையும், அனிதாவையும் காவல்துறையினர் நேரில் அழைத்து பேசினர்.  

 

இனிமேல் தவறான தொடர்பை இருவரும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அவர்களிடம் காவல்துறையினர் எழுதி வாங்கியுள்ளனர். இதையடுத்து அனிதா தர்மபுரியில் இருக்கப் பிடிக்காமல் சேலத்திற்கு இடமாறுதல் பெற்று வந்துள்ளார்.  

 

சேலத்திற்கு மாறுதல் பெற்று வந்ததில் இருந்தே அனிதா கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தான் காதலித்து வந்த ஆசிரியரை பார்க்க முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ஆசிரியர் ஏதேனும் தற்கொலைக்கு தூண்டினாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்