
விருதுநகரில் குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிளந்தால்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவேலு (47). விவசாயத் தொழிலாளியான இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 5 மற்றும் 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக விவசாயி சுந்தரவேலு இன்று காலை மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை வெட்டி படுகொலை செய்துவிட்டு தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உடனடியாக அங்கு வந்த தாலுகா போலீசார் மூன்று பேர் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்மிக்கல் குளவி மற்றும் அரிவாள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மூன்று பேரையும் சுந்தரவேலு கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.