
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் படிக்கச் சொன்ன தந்தையின் தலையில் கல்லைப் போட்டு மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் தங்கபாண்டி. தனியார் கல்லூரியில் பயின்று வந்த நிலையில் மகன் தங்கபாண்டி சரியாக படிக்கவில்லை என மாரியப்பன் எச்சரித்து வந்துள்ளார். இதனால் சில நாட்களாகவே தங்கபாண்டி வீட்டில் உள்ளவர்களிடம் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் முன்பகுதியில் மாரியப்பன் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அவருடைய தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு தங்கபாண்டி கொலை செய்துள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்த பொழுது மாரியப்பன் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. உடனடியாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் மாரியப்பன் உடல் கைப்பற்றப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலை செய்துவிட்டு வெளியூருக்கு தப்பியோடும் நோக்கில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்த மகன் தங்கபாண்டியை போலீசார் கைது செய்து விசாரித்ததில் சரியாக படிக்காததை கண்டித்ததால் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அண்மையாகவே நெல்லையில் பள்ளி மாணவர்கள் அரிவாளால் தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில் மகனே தந்தையின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.