
திருச்சி மாவட்டம், நெடுங்கூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி (49). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், அரவிந்த் குமார் (29), வினோத்குமார் (19) என 2 மகன்களும் உள்ளனர். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சாந்தி தனது 2 மகன்களுடன் தனியாக வசித்துவருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (06.11.2021) சுப்பிரமணிக்கும், அவரது மகன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோத் குமார், அரவிந்த் குமார் ஆகிய 2 பேரும் இரும்பு பைப்பால் தங்கள் தந்தை சுப்பிரமணியை ஓங்கி அடித்துள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வினோத்குமார் மற்றும் அரவிந்த் குமார் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.