Skip to main content

தந்தையைக் கொன்ற மகன்..! ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்..! 

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

 father passes away in asset problem..  High court orders life sentence for son

 

கோவையில் குடும்பத் தகராறில் தந்தையை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற மகனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதிசெய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

கோவை மாவட்டம், தளவாய்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மயில்சாமி, தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேத்தியுடன் வசித்துவந்தார். மயில்சாமியின் மகன் கனகராஜ், குடித்துவிட்டு வந்து அடிக்கடி தந்தையிடம் தகராறு செய்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தந்தைக்கும், மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சொத்து எதையும் தரப்போவதில்லை என மயில்சாமி கனகராஜிடம் கூறியிருக்கிறார். 

 

இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ், தென்னந்தோப்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மயில்சாமியை மண்வெட்டியால் அடித்துக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம், கனகராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

 

இதை எதிர்த்து கனகராஜ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் ஆர்.பொங்கியப்பன் அடங்கிய அமர்வு விசாரித்தது. 

 

அப்போது, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் பல்டி அடித்துவிட்டதாலும், வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாமதமாக நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாலும் சந்தேகத்தின் பலனை கனகராஜுக்கு வழங்க வேண்டும் என அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நேரில் பார்த்த சாட்சிகள் பல்டி அடித்திருந்தாலும், கனகராஜின் மனைவியும், மாமனாரும் நடந்த சம்பவத்தை விளக்கி சாட்சியம் அளித்துள்ளதாகவும், ஆவணங்களை உடனடியாக நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்காததால் இந்தச் சம்பவத்தை நம்ப முடியாது எனக் கூற முடியாது எனக் கூறி, மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

 

கனகராஜுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதிசெய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்