Father passed away police searching for his son

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை கீழ்பாதி பகுதியை சேர்ந்தவர் லூர்துசாமி. இவரது மூத்த மகன் ஜான்சன்(37). இவருக்கு அடுத்து 2 தம்பிகள், ஒரு தங்கை அனைவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். தங்கை மற்றும் தம்பிகள் இருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. ஜான்சன் படிக்காமலும் வேலைக்குச் சென்று சம்பாதிக்காமலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாய் தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவர்களிடம் அடிக்கடி பிரச்சனயில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Advertisment

ஜான்சனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் யாரும் இவருக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை. தாய் தந்தை இருவரும் பல இடங்களில் ஜான்சனுக்கு பெண் கேட்டும் யாரும் கொடுக்கவில்லை. இதனால், ஜான்சன் பெற்றோரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஜான்சன், தந்தை லூர்துசாமியிடம் தனது திருமணம் குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

இதில் ஆத்திரமடைந்த ஜான்சன், கருங்கல்லால் தந்தை லூர்துசாமியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த லூர்துசாமியை உறவினர்கள் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று லூர்துசாமி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து லூர்துசாமியின் மற்றொரு மகன் ஜான் பிரிட்டோ சோழதரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி உத்தரவின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா வழக்கு பதிவு செய்து தந்தையை கொலை செய்த மகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.