Skip to main content

மருமகனை அடித்து கொலை செய்த மாமனார்!

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

Father-in-law who incident his son-in-law

 

கடலூர் மாவட்டம் ஆவினங்குடி காவல் நிலையம் அருகில் உள்ள நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது ரகுபதி. பி.இ பட்டதாரியான இவர் அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் சத்யா என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

 

திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் வெளிநாட்டுக்குச் சென்ற ரகுபதி மீண்டும் ஊருக்கு வந்து உரிய வேலை கிடைக்காததால் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் பணத்தை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அதேபோல் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வந்த ரகுபதி மனைவி சத்யாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். நடு இரவு வரை கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு நீண்டு கொண்டே இருந்து. ஒரு கட்டத்தில் மனைவி சத்யாவை ரகுபதி அடித்து துன்புறுத்தியுள்ளார்.

 

சத்யாவின் அழுகுரல் கேட்டு அவரது தாயார் சசிகலா (50) குடித்து விட்டு எனது மகளை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகுபதி அருகில் கிடந்த செங்கலை எடுத்து மாமியார் சசிகலாவின் கன்னத்தில் அடித்துள்ளார். இதில் மாமியார் சசிகலா பல் உடைந்து ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாமனார் செல்வராஜ் ரகுபதியிடம் நியாயம் கேட்டுள்ளார்.

 

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மாமனார் செல்வராஜ் மரக்கட்டையை எடுத்து ரகுபதியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் ரகுபதி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று ரகுபதியை தூக்கி பார்த்த போது அவர் உயிர் இழந்தது தெரிய வந்தது. உடனடியாக இதுகுறித்து ஆவினங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த ரகுபதி உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த சம்பவம் குறித்து ரகுபதியின் தாயார் சகுந்தலா ஆவினங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரகுபதியின் மாமனார் செல்வராஜை கைது செய்தனர். இந்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் நேரடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மாமனார் மருமகனை அடித்துக் கொலை செய்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்