Skip to main content

தங்கைகளை திட்டியதால் ஏற்பட்ட தகராறு; மகனைக் கொன்ற தந்தை

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

father arrested by police in son passed away case

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் அருகில் உள்ள எலியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்(50). இவருக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி சந்திராவுக்கு சசிகுமார் (24) என்ற மகன் உள்ளார்.  முதல் மனைவி சந்திரா இறந்து விட்ட நிலையில், வசந்தா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர். 

 

இந்த நிலையில் மயில், கேரளாவுக்கு சென்று அங்கு மீன் பிடிக்கும் வேலை செய்து வருகிறார். அவரது மூத்த மனைவியின் மகன் சசிகுமார் கூலி வேலை செய்து வருகிறார். இவர், இரு தினங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், மயில் நேற்று முன் தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து அவரது மகள்களை திட்டி உள்ளார். இது குறித்து மகன் சசிகுமார் தந்தையை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இதில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். 

 

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் சமாதானம் செய்து பிரித்து அனுப்பி வைத்தனர். தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக தீராத ஆத்திரத்தில் இருந்த மயில், இரவு பத்து மணி அளவில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மகன் சசிகுமாரை அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். மேலும், கடப்பாரையைக் கொண்டு மகனின் முகத்தையும் சிதைத்துள்ளார். இந்த தாக்குதலால் சசிகுமார் சம்ப இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் இந்த கொலை சம்பவம் குறித்த தகவலை கச்சராபாளையம் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை மயிலை தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கச்சராபாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்