சமையல் எரிவாயு சிலிண்டர்களைக் குடோனில் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி அருகே உள்ள கேட்டுக்காடு பகுதியில் குடோன் ஒன்றில் ஏராளமான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அன்னதானப்பட்டி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் உரிமையாளர்களான மாணிக்கம் மற்றும் அவரது மகன் சங்கர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அவர்களது குடோனில் சோதனை நடத்தியதில் ஏராளமான எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, காவல்துறையினர் சார்பில் சேலம் மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு 200 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.