Skip to main content

காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்கு வரவில்லை: விவசாயிகள் வேதனை

Published on 01/08/2018 | Edited on 27/08/2018
Farmers worried


வாய்க்கால்கள் தூர்வாராப்படாததால் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடைப்பகுதிகளுக்கு வந்துசேரவில்லை என குறைதீர்க்கும் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர்.
 

 

 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி பேசும்போது: ஆவுடையார்கோவில் தாலுகாவில் 2017-18-ஆம் ஆண்டுக்கு பயிர்க்காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆவுடையாhர்கோவில் தாலுகாவில் 3822 ஹெக்டேர்தான் மொத்த விவசாய நிலப்பரப்பு. ஆனால், 5274 ஹெக்டேருக்கு பயிர்க்காப்பீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஏம்பல் பிர்காவில் 3500 ஏக்கரும், மீமிசல் பிர்காவில் 684 ஏக்கரும், பொன்பேத்தியில் 1262 ஏக்கரும் கூடுதலாக பயிர்க்காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதோ மோசடி நடப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்குப் பதிலளித்த ஆட்சியர், அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடைப்பகுதிகளுக்கு வந்துசேரவில்லை. கடலில் கலந்து நீர் விணாகிறது. எனவே, போர்க்கால அடிப்படையில் உடனடியாக வாய்க்கால்களை தூர்வரா நடவடிக்கை எடுக்க வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்தை இந்தப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். உபரிநீர் கடலில் கலப்பதைத் தடுத்து பாசனத்திற்குப் பயன்படுத்துவதே காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தின் பிரதான நோக்கம். ஆனால், வழக்கம் போல இந்த ஆண்டும் கடலில் தண்ணீர் வீணாகிறது. எனவே, திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் உபரிநீர்த்திட்டம் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
 

 

 

கறம்பக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. அதிகாரிகள் தலையிட்டு சீரான மின் வினியோத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வந்துசெல்லும் திங்கள் கிழமை மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கம் கூட்ட நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் எனப் பேசினார். வரும் நாட்களில் சிறப்புப் பேருந்துகள்  இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.
 

விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் சி.சுப்பிரமணியன் பேசும்போது: ஆவுடையார்கோவில் தாலுகா இலங்குடி கிராமத்தில் குறைவான மின் அழுத்தத்தை போக்கும் வகையில் கூடுதல் மின்மாற்றி அமைத்திட வேண்டும். எழுநூற்றுமங்களம், அரசூர் பாசன ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆவுடையார் கோவில் வெள்ளாற்றில் நடைபெறும் மணல்கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். பதிலளித்த ஆட்சியர், ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார்.
 

 

 

விவசாயி சொக்கலிங்கம் பேசும்போது: அறந்தாங்கி தாலுகா பூவரக்குடி வரிசாக்குளத்தில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் வனத்துறையின் சார்பில் நட்டு வளர்க்கப்பட்டுள்ள யூக்கலிப்பிட்டஸ் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்றார். கூட்டத்திலேயே வனத்துறை அதிகாரிகளை அழைத்து கண்டித்த ஆட்சியர் உடனடியாக அப்புறப்படுத்தவில்லை என்றால் வட்டரா வளர்ச்சி அலுவலர் மரங்களை அப்புறப்படுத்தப்படும் என்றார்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா கூட்டணி ஜெயித்தால் மேகதாது அணை கட்டப்படும்; முதல்வர் மௌனம் ஏன்? - அன்புமணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Anbumani condemns that Mekedatu Dam will be built if the Indian alliance wins

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியிருக்கிறார்.  பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை  ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘’மேகேதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.  சித்தராமையாவின் இந்தப்  பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படியும்  காவிரி  ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்தப் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ்  ஆட்சியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில்  மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும்  அவர் அமைதியாக  இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும்  காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்து விட்டார் என்பதுதான்.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே  4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளைக் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின்,  இப்போது மேகதாது அணைக் கட்டும்  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்தத் துரோகத்திற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.