Skip to main content

விவசாயியின் மனைவி அடித்து கொலை; காவல்துறை விசாரணை!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

Farmer's wife passes away near salem thalaivasal; Police investigation!

 

தலைவாசல் அருகே, கணவரை பிரிந்து தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த விவசாயியின் மனைவி மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் வேப்பணம்பூண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அழகுவேல் (51). விவசாயி. இவருடைய முதல் மனைவி சித்ரா (45). இவர்களுக்கு ஆகாஷ், அனீஷ் என இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன், மனைவி இருவரும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டனர்.

 

இதையடுத்து அழகுவேலுக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள வீட்டில் சித்ரா வசித்து வந்தார். இதற்கிடையே, கெங்கவல்லி காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் ஒருவரை அழகுவேல், இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 வயதில் ஆண் குழந்தை உள்ளது. முதல் திருமணத்தை மறைத்து, தன்னை இரண்டாவதாக திருமணம் செய்ததை அறிந்த பெண் காவலர், கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு அழகுவேலை விட்டு பிரிந்து சென்று பெற்றோருடன் வசிக்கிறார். 

 

இந்நிலையில், அழகுவேலின் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சித்ரா, மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அக். 14ம் தேதி தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வீரகனூர் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடத்தில் சென்று விசாரணை நடத்தினர். சித்ராவின் உடலில் சில இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

சித்ராவின் வீடு அருகே, தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கும் சித்ராவுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருந்து வந்துள்ளதாகவும்  இதில் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டாரா? என்ற சந்தேகத்தின்பேரில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர். 

 

சித்ராவின் செல்போனுக்கு வந்த அழைப்புகள், சென்ற அழைப்புகளின் விவரங்களை சேகரித்தும் விசாரணை நடந்து வருகிறது. அவரை கடைசியாக சந்தித்தவர்கள், அக்கம்பக்கத்தினர் ஆகியோரிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்தபோது மகன்கள் இருவரும் எங்கே சென்றனர் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.