
காவிரி டெல்டா பாசனத்திற்கு வழக்கம் போல ஜூன் 12 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்து மலர்கள் தூவினார். தொடர்ந்து 15 ஆம் தேதி கல்லணையிலும் முதலமைச்சர் தண்ணீர் திறந்து வைத்து மலர்கள் தூவினார். இந்த நிலையில் கால்வாய் காங்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக டெல்டா கடைமடை பாசனத்திற்கு கல்லணைக் கால்வாயில் 1,500 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடை வரை சில நாட்களில் செல்லும். ஆனால் இந்த முறை 500 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் கடைமடைக்குத் தண்ணீர் வந்தடைய சில நாட்கள் ஆனது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி தாலுகாவில் உள்ள கடைமடை பாசனத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் 160 ஏரி, குளங்களில் தண்ணீரை நிரப்பி பாசனம் செய்து பயிர் சாகுபடி செய்வதற்காக கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு பகுதிக்கு இன்று மதியம் வந்தடைந்தது.

புது தண்ணீர் வருவதைப் பார்த்து மகிழ்ந்த விவசாயிகள், கல்லணைக் கோட்ட அதிகாரிகள் தேங்காய் உடைத்து சூடம் காண்பித்து மலர்கள், நவதானிய விதைகள் தூவி தண்ணீரை வரவேற்றனர். இன்று இரவு அல்லது நாளை கடைமடையின் கடைசி பகுதியான நாகுடிக்கு தண்ணீர் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டு ஏரி குளங்களில் தண்ணீரை நிரப்பும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. கல்லணை கால்வாயில் நேரடிப் பாசனம் இல்லாததால் ஏரி குளங்களில் தண்ணீர் நிரம்பிய பிறகே விவசாயப் பணிகள் தொடங்கும் என்கின்றனர் விவசாயிகள்.