Skip to main content

“முதலமைச்சருடன் விவாதிக்க தயார்...” பி.ஆர்.பாண்டியன் சவால்

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

Farmers union leader P.R.Pandiyan

 

நிவர், புரவி புயல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் திருத்துறைப்பூண்டி பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின் கச்சணம் கிராமத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “நிவர், புரவி புயல் தாக்குதலால் வரலாறு காணாத பெரும் மழை பொழிவை தமிழகம் சந்தித்து இருக்கிறது. குறிப்பாக கடலூர் துவங்கி ராமநாதபுரம் மாவட்டம் வரையிலும் மிகப் பெரும் சேதத்தை விளைவித்து இருக்கிறது.

 

ஓரிரு மாதங்கள் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களில் கொட்டித் தீர்த்து இருக்கிறது. இதனால் கிராமங்களில் விளை நிலங்கள் முற்றிலும் நீரால் சூழப்பட்டு சுமார் பதினைந்து தினங்கள் பயிர்கள் மூழ்கி அழிந்து போய்விட்டது. இனி மறு உற்பத்திக்கு வாய்ப்பில்லை. குறிப்பாக 20 லட்சம் ஏக்கர் அளவிற்கு நீரால் சூழப்பட்டு தற்போது ஓரிரு நாட்களாக வடிய தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் 6 லட்சம் ஏக்கர் முற்றிலும் அழிந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

 


நீரால் சூழப்பட்ட நிலையிலேயே விரைந்து முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டது விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், திருவாரூரில் தனது சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து செய்தியாளர்களிடம் பேசும் போது, இதுவரையிலும் 1 லட்சத்து 32 ஆயிரத்து 867 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளி விவரத்தை சொல்லிவிட்டு முழு கணக்கெடுப்பு நடத்துவதாக தெரிவித்திருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

 

6 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்ட நிலையில், கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு 1.32 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டிருப்பதாக இலக்கசொல்லி கணக்கெடுப்பு செய்வது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே இதனை மறுபரிசீலனை செய்து சிறிய பெரிய விவசாயிகள் என்ற பாகுபாடின்றி முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும். இழப்பீடு தொகை குறித்து முதலமைச்சர் அறிவிக்காதது விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை உடனடியாக ஒரு தெளிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற விரோத சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. கார்ப்பரேட் ஆதரவானது என்று விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக இருக்கிறார்கள்' தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

 

சட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு சட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்து தெளிவுப் படுத்த முடியாத  நிலையில் அவர் வாய் திறக்க மறுக்கிறார்.

 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி எம்.எஸ்.பி.க்கு எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் தரப்படும், பாதிப்பு குறித்து சில மாற்றங்களை செய்த சட்டத்தை கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தான் ஆதரித்த ஒரே காரணத்துக்காக ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளும் பாதிக்கக்கூடிய  பேரழிவு சட்டத்திற்கு தொடர்ந்து வக்காலத்து வாங்கி பேசுவது விவசாயிகள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் உடனடியாக அந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் ஒரு முதலமைச்சர் விவசாயியாக இருப்பதை நான் பெருமைப்படுகிறேன் நான் ஒரு பாமர விவசாயி முதலமைச்சரோடு எந்த இடத்திலும் பொது மேடையிலோ அல்லது அவரது அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முன்னிலையிலோ அல்லது அவர் விரும்புகிற ஊடகத்தில் அவர் விவாதிக்க தயாராக இருப்பார் என்றால் நான் அவரோடு உட்கார்ந்து சட்டம் குறித்து விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன் என் சவால் விடுகிறேன். அவர் இதுகுறித்து தனது நிலையை தெளிவுப்படுத்த முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராட்டையுடன் விவசாயிகள் சத்தியாகிரகம்; மஜகவின் தமிமுன் அன்சாரி  பங்கேற்பு

Published on 15/08/2023 | Edited on 15/08/2023

 

nn

 

இன்று சென்னை பெசன்ட் நகரில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகளின்  25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.

 

ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி காந்திய வழியில், ராட்டையை முன்வைத்து நடைபெற்ற அமைதியான இந்நிகழ்வில், மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி  பங்கேற்று பேசினார்.

 

அவர் பேசியதிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு, “விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு என்றார் காந்தியடிகள். அவரது வழியில் ராட்டையை முன்வைத்து நடைபெறும் இப்போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தகைய நூதன போராட்டம் பற்றி சிந்திக்கும் தலைமைத்துவம் பி.ஆர்.பாண்டியனிடம் உள்ளது. விவசாய சங்கத்தை துடிப்புடன் கட்டமைத்து, முழு நேரமாக விவசாயிகளுக்காக பாடுபடும் விவசாயப் போராளியாக உருவெடுத்துள்ளார்.

 

நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தப் போது, விவசாயிகளின் பிரதிநிதியாகவே செயல்பட்டேன். விவசாயிகள் என்பவர்கள் கபடமற்ற தொழிலாளிகள். பயிர்களும் வாழ வேண்டும், உயிர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். எனவே, விவசாயிகள் எங்கு பாதிக்கப்பட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். நமது நாட்டில் விவசாயிகள் பல வகையிலும் பாதிக்கப்படுகிறார்கள். மணிப்பூரில் நடப்பது சமூக- இன மோதலாக மட்டும் பார்க்கப்படுகிறது. ஆனால் விவசாயிகளின் பிரச்சனை அதில் உள்ளது.

 

குக்கி இன விவசாயிகளின் மலை நிலங்களை பறித்து கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கும் சதித்திட்டம் அதில் உள்ளது. பழங்குடியின உரிமையை மற்றவர்களுக்கும் கொடுத்து, அதன் வழியாக நிலங்களை பறித்து, அதானி - அம்பானிகளுக்கு வழிவிடும் சதி அதில் அடங்கியுள்ளது. அதேபோல் ஹரியானாவில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு பின்பும் ஒரு காரணம் உள்ளது.

 

nn

 

அந்த முஸ்லிம்கள் பெரும்பாலும் விவசாயிகள். அவர்களிடம் சொந்த நிலங்கள் உள்ளது.டெல்லியில் நாடு தழுவிய அளவில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அவர்களுக்கு உணவு அனுப்பி உதவியவர்கள் அவர்கள்தான். அதனாலேயே இப்போது குறி வைக்கப்பட்டுள்ளார்கள். இதை அறிந்து கொண்ட ஹரியானா விவசாயிகள், தங்களது சக முஸ்லிம் விவசாயிகளுக்கு ஆதரவாக திரண்டுள்ளனர். எனவே, விவசாயிகள் நாட்டில் நடைபெறும் பிரச்சனைகளின் பின்னணி நுட்பங்களை புரிந்துக் கொள்ள வேண்டும்.

 

இப்போது நாம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளைத் தான் வைக்கிறோம். நெருக்கடி கொடுக்கும் நோக்கம் இல்லை. எனவே, இக்கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அடுத்த கட்ட வளர்ச்சியையும், நவீன தொழில் நுட்பத்தையும், உலகளாவிய சந்தையையும் அறிய அவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி பட்டறை (Workshop) நடத்த பி.ஆர்.பாண்டியன் திட்டமிட வேண்டும். ஏனெனில், உலகளாவிய உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்புகளை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

தாய்லாந்து விவசாயிகள் தங்களது உற்பத்தியை உலக சந்தைக்கு கொண்டுச் செல்கிறார்கள். நுங்கையும், இளநீரையும் கூட டின்களில் அடைத்து விற்கிறார்கள். இங்கு நாம் இளநீரின் மகத்துவத்தையும், பனை மரத்தின் பொருட்களையும் உலகளவில் சந்தைப்படுத்தாமல் உள்ளோம். உள்நாட்டில் தென்னையிலிருந்து உருவான 'நீரா பானம்’ என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. விவசாயிகளின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சியாகும்”என்றார். 

Peasants satyagraha with rattai

 

முன்னதாக பேசிய பி.ஆர்.பாண்டியன் அவர்கள், கடந்த 2016 - 2021 காலத்தில் விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளையும் இவர் மூலமாக சட்டமன்றத்திற்கு நாங்கள் கொண்டு சென்றோம் என்றும், இப்போதும்  மக்களுக்கான போராட்ட களத்தில் முதல் நபராய் இருப்பவர் நமது தமிமுன் அன்சாரி என்றும் பாராட்டி பேசினார்.

 

இன்றைய போராட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:-

 

நில ஒருங்கிணைப்பு சட்டம்- 2023 ஐ திரும்ப பெற வேண்டும்; நெல்லுக்கு  குவிண்டாலுக்கு 3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு 4 ஆயிரம் தர வேண்டும்;தமிழ்நாட்டுக்கென தனி வேளாண் காப்பிட்டு திட்டத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும்; காவிரி , முல்லை பெரியாறு உரிமைகளை பாதுகாத்திட வேண்டும்; விவசாய நிலங்களை கையகப்படுத்தி போடப்படும் சாலைகளில் சுங்க கட்டண வருவாயில் (TOLL GATE) ஒரு பகுதியை அந்த நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட  25 கோரிக்கைகளுடன் இன்றைய சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.

 

 

 

Next Story

என்.எல்.சி நிலம் கையகப்படுத்தும் இடத்திற்கு செல்ல பி.ஆர்.பாண்டியனுக்கு அனுமதி மறுப்பு

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

NLC administration denied permission to go to land acquisition site

 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே  வளையமாதேவி, மேல் வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதியில்  என்.எல்.சியால் நிலம் கையகப்படுத்தப்பட்டு வாய்க்கால் வெட்டும் இடமான  வளையமாதேவிக்கு செல்ல முயன்ற காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

 

இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''1956-ல் என்எல்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. அன்றைக்கு மக்கள் வரவேற்றார்கள். விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தார்கள். வேலைவாய்ப்பு பெருகும். வருவாய் பெருகும் என நம்பி நிலங்களை கொடுத்தார்கள். இரண்டாவது சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. முதல் சுரங்கம் அமைக்க விவசாயிகள் நிலம் கொடுத்த போது வழங்கிய நிலங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இன்று வரை அந்த குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்று கூட ஒப்பந்த தொழிலாளர்கள் என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடுகிறார்கள்.

 

நிலத்தை கொடுத்தவர்கள் வேலை கேட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். முதல் சுரங்கம் அமைக்கின்றபோது உறுதியளித்தபடி அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏற்கனவே பரவனாறு வடிகால் வழியாக தண்ணீர் வெளியேறி விவசாய நிலங்களை பாதித்திருக்கிறது. இப்போது பரவனாறு வடிகாலை ஆக்கிரமிப்பு செய்து வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

 

NLC administration denied permission to go to land acquisition site

 

இரண்டாவது சுரங்கத்திற்கு நிலங்களை தர மாட்டோம் என விவசாயிகள் மறுத்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கு என்எல்சி நிறுவனம் ஒப்புக்கொண்டபடி இழப்பீடு தொகை வழங்கவில்லை. தற்போது 25 லட்சம் இழப்பீடு, வேலை என முதலமைச்சர் சொல்கிறார். ஆனால் இவை எதுவும் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. நேற்று முன்தினம் ஒட்டுமொத்த பேரழிவை என்எல்சி நிர்வாகத்தால் கடலூர் மாவட்டம் சந்தித்திருக்கிறது. என்.எல்.சியை வெளியேற்ற வேண்டும் என்ற இறுதி கட்ட போராட்டம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு காவல்துறையை வைத்து விவசாயிகளை வஞ்சிக்கிறது. வழக்கு போட்டு மிரட்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல். ஒட்டுமொத்த இந்த நெய்வேலி பகுதி இந்திய வரைபடத்தில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. காவல்துறை கிராமங்கள் முழுவதும் குவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நிலத்தைப் பிடுங்காதே, வாழ்வாதாரத்தை அழிக்காதே என மக்கள் கதறுகிறார்கள். பேரழிவை ஏற்படுத்தும் என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில், வேளாண்மைதுறை, நீர்பாசன துறை, சுற்றுச்சூழல் துறை செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை அமைத்து என்.எல்சி.யால்  பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அனுப்பி விவசாயிகளிடம் கருத்துக்கேட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

 

ஏற்கெனவே என்.எல்.சி நிறுவனத்திற்காக நிலங்களை கொடுத்தவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் முதலமைச்சர் தலைமையில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தி ஆய்வு அறிக்கை அடிப்படையில் என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். முதல் சுரங்கத்திற்கு வடிகால் வசதி இல்லாததால் அந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து விவசாயிகளையும், கட்சிகளையும் ஒருங்கிணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

 

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்து உயர்மட்ட குழுவை அனுப்ப வேண்டும். என்னை தடுப்பதன் மூலம் மனித உரிமை மீறலில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. முதலமைச்சரின் மௌனம் என்பது ஆட்சியின் தவறான செயல். இதனால் தமிழக விவசாயிகள் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். மக்களின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் வாய் திறந்து பேசி மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்'' என கூறினார்.