Skip to main content

''கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போகுதே'' -வேதனை கண்ணீரில் விவசாயிகள்!! 

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது' என்ற கிராம பழமொழிபோல் சம்பா அறுவடை செய்யும் நேரத்தில் நெற்கதிரில் வைரஸ் நோய் தாக்கி விவசாயிகளை கண்ணீரில் மிதக்கவைத்து வாழ்வையே தலைகீழாக மாற்றியுள்ள சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட  மீதிகுடி, கோவிலாம்பூண்டி, நார்க்கரவந்தன்குடி, சித்தலப்பாடி, பின்னத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நெல் பயிர் செய்துள்ளனர்.  நெற்பயிர்கள் அனைத்தும் கடந்த 8 ஆண்டுகளில் இல்லா அளவிற்கு செழித்து வளர்ந்து கதிர்கள்  முற்றியுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் ஆழ்திருந்த விவசாயிகள் கடந்த வாரம் பொங்கல் திருவிழாவை நெல் வயல்களில் கொண்டாடியுள்ளனர்.

 

 Farmers in tears!

 

இந்தநிலையில் பொங்கல் முடிந்து வயலுக்கு வந்த மீதிகுடியை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் நெல்களை பார்க்க வயலுக்கு வந்துள்ளார்.

வயலுக்கு வந்த அவர் மதியம் வரை வீடு திரும்பவில்லை. இதனையறிந்த அக்கம்பக்கத்தில் உள்ள விவசாயிகள் அவரை தேடி வயலுக்கு சென்றனர். அப்போது அவர் தலையில் துண்டை போட்டுகொண்டு வயலின் வரப்புகளில் உட்கார்ந்து மன உளைச்சலால் அழுதுகொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்த விவசாயிகள் அவர்களும் நெஞ்சில் ஈட்டிபாய்ந்தது போல் அவருடன் அமர்ந்து வயலையே பார்த்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ராதகிருஷ்ணன் கூறுகையில், பொங்கலன்று வயலுக்கு வந்து பார்வையிட்டு மகிழ்சியாக சென்றேன். அதன்பிறகு வந்து பார்த்தபிறகு நெற்கதிர்களில் அதிகாலை நேரத்தில் மஞ்சள் நிற கட்டிகள் போல் உள்ளது. வெய்யில் அதிகமாகுபோது கருப்பு நிறமாக மாறியது. வயல்களில் பாதி அளவிற்கு இதேபோல் உள்ளது. இதுபோன்று உள்ள நெற்கதிர்களில் நெல்மணிகள் பதறுகளாக காய்ந்து வருகிறது. சுற்றுவட்ட எல்லா வயல்களிலும் இது பரவியுள்ளது.

 

 Farmers in tears!


இதனை நாங்க சின்னவயசுல இருந்த காலத்தில் நெல்பழம் என்று கூறுவதை கேட்டிருக்கிறோம். ஆனால் அப்போது நெல் மணிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. தற்போது வந்துள்ளது நெல்மணிகளை காலி செய்கிறது. இதனால் எங்கள் வாழ்வாதரமே காலியாக போகிறதே என வேதனையில் வீட்டுக்கு செல்லாமல் சரியான முறையில் சாப்பிடகூட முடியாமல் வாங்கிய கடனை எப்படி கட்டபோகிறோம் என்ற வேதனையில் வயலை பார்த்து வயிறு எறிகிறது என்றார்.

 

 Farmers in tears!


அதே ஊரை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், நாங்க பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம் இது போன்றவற்றை பார்த்தது இல்லை. தற்போது தான் இது போன்று பார்கிறோம். இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தனியார் மருந்து கடைகளுக்கு சென்று நெற்பயிரில் மஞ்சள் கட்டிபோல் வந்துள்ளது என்று கூறி மருந்துகளை வாங்கி வந்து மூன்று முறை அடித்தோம் எந்த மருந்திற்கும் அது எடுபடவில்லை. தினந்தோறும் அது பல வயல்களுக்கு காற்றில் பரவிகொண்டு இருக்கிறது. தற்போது கதிர் பிடிக்கும் வயல்களில் கூட இது பரவியுள்ளது. ஒரு முறை மருந்து அடிக்க ரூ 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை  செலவாகிறது. தற்போது விளைந்த நெல்லில் பாதியளவிற்கு தேறுமா? என்ற கவலை ஏற்பட்டுள்ளது. அறுப்பு கூலிகூட மிஞ்சாது பயிர் செய்ததிற்கு மாட்டுக்கு வக்கில் தான் மிஞ்சும். எனவே அரசு இந்த நோய் வராமல் தக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நெற்பழம் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க வேண்டும் என்கிறார்.
 

இதுகுறித்து சம்பந்தபட்ட வேளாண் அதிகாரிகளோ இது லட்சுமி வைரஸ் என்ற வகையைச் சார்ந்த நோயாகும். அதிக மகசூல் உள்ள வயல்களில் இந்த நோய் மின்னல் வேகத்தில் காற்று மூலம்  பரவும் தன்மை கொண்டதாகும் கடந்த பொங்கலுக்கு பிறகு நெல் பயிர்களில் இந்த நோய் மிக வேகமாக தாக்கி கதிர்கள் அனைத்தும்  பதறாக மாற்றியுள்ளது. ஒவ்வொரு கதிரிலும் சுமார் 100 நெல்மணிகளை கொண்டதை பாதி நெல் மணிகளில் வைரஸ் பூச்சி தாக்கி பதறாத மாற்றுகின்றது. இனிமே இதனை எந்த மருந்துகளாலும் கட்டுப்படுத்த முடியாது. விவசாயிகள் விலைகுறைவாக கிடைக்கும் சில போலி மருந்துகளை அடிப்பதால் இதுபோன்ற வைரஸ்களை எளிதில் கட்டுபடுத்த முடியவில்லை என  கூறுகிறார்கள்.

 

 Farmers in tears!

 

விவசாயிகள் கடந்த 8 ஆண்டுகளாக தொடர் வறட்சியாலும், தண்ணீராலும் எங்கள் மகசூல் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு குறித்த நேரத்தில் வீராணத்தில் இருந்து தண்ணீர் வந்தது. மழையும் சரியான நேரத்தில் பெய்தது. எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்சியாக ,இருந்தோம். இந்த லட்சுமி வைரஸ் தாக்கியதால் எங்கள் எங்களின் மகிழ்ச்சி வாழ்வாதரம் தலைகீழாக மாறிவிட்டது. வைரஸ் தாக்கிய நெல் மற்றும் வைக்கோலை வாங்க எவரும் வர மாட்டார்கள் நாங்கள் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி பயிர் செய்துள்ளோம். அந்தக் கடனை அடைப்பது எப்படி என்றும் எங்களுக்கு தெரியவில்லை என கண்ணீர் மல்க வேதனையில் கூறுகிறார்கள். 

எனவே அரசு எங்களுக்கு வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்கவேண்டும் என்கின்றனர் 'நமக்கு சோறு போடும் விவசாயிகள்'.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.