Skip to main content

உர தட்டுப்பாட்டால் தவிக்கும் விவசாயிகள்

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

Farmers suffering from fertilizer shortage!

 

வடகிழக்குப் பருவமழை இந்த வருடம் எதிர்பாராத வகையில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாகப் பெய்ததில் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாயின. மாநிலத்தின் அனைத்து அணைகளும் அதன் கொள்ளவை எட்டியுள்ளன. இதே போன்று தென் மாவட்டங்களிலும் தொடர் கனமழையின் காரணமாக தாமிரபரணியாற்றில் வெள்ளப்பெருக்குவரை நிலைமை போனது. இந்த அடைமழை காரணமாக விவசாயப் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அதே சமயம் விவசாயிகளுக்கு அவசியத் தேவை உரம். 

 

தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாடு எனும் பகுதி தாமிரபரணிக் கரையோரம் அமைந்துள்ளது. அதனைச் சுற்றியுள்ள அகரம், பக்கம், வசப்பபுரம் முறப்பநாடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் பயிர் போடப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் ஒரு போகம், தவறினால் இரண்டு போகம் என்று மகசூல் கண்ட விவசாய நிலங்கள், தற்போதைய மழை செழிப்பு காரணமாக மூன்று போக விளைச்சலுக்குத் தயாராகியுள்ளன.

 

Farmers suffering from fertilizer shortage!

 

இதனால் தற்போதைய நிலையில் நெல் பயிரின் ஆரம்ப அடி உரமான யூரியா மிக அவசியமாகிறது. அரசின் வேளாண்துறையினர் யூரியா மூடை பெறுவதற்கு ஆதார் அவசியம் என்று அறிவித்துள்ளனர். இதனால் வல்லநாடு மற்றும் சுற்றுப்புற கிராம விவசாயிகள் தேவையான யூரியா மூடையைப் பெற ஆதார் கார்டுகளுடன் வல்லநாடு கிராமத்தின் தனியார் கடையில் குவிந்துள்ளனர்.

 

ஒரு ஆதார் கார்டுக்கு ஒரு மூடை யூரியாதான் என்று சொல்கிறார்கள். ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு இங்கே ஒன்று முதல் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. எனவே எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு ஒரு மூடை யூரியா விவசாயத்திற்கு சரிப்படுமா. பொதுவாக ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு அதன் மகசூல் பருவம்வரை இரண்டு மூடைகள் குறைந்தபட்சம் தேவைப்படும். ஒரு மூடையைக் கொண்டு சமாளிக்க முடியுமா. பயிர் வெளைஞ்ச குடும்பப்பாடு கழியும் என்பதே எங்கள் நிலை. பயிர் விளையாவிட்டால் நட்டமாகிவிடுமே. மொத்தத்தில் இந்த மாவட்டத்தில் மட்டும் 400 மெட்ரிக் டன் யூரியா வந்ததுள்ளது. அது போதாமல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கு. மேலும் யூரியாவைப் பெற ஆதார் கார்டுடன் இங்கே உள்ள தனியார் கடையில் தவம் கிடக்க வேண்டியிருக்கு. அரசு தலையிட்டு விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை வழங்க வேண்டும் என்கிறார்கள் வல்லநாடு விவசாயிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.