Skip to main content

பொங்கல் பரிசுத்தொகுப்பில் பன்னீர் கரும்பு இல்லாததைக் கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

Farmers struggle lack of sugarcane in Pongal gift package!

 

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட பரப்பளவில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் அதையொட்டி வரும் ஆற்றுத்திருவிழாக்களை முன்னிட்டு கரும்புகள் அறுவடை செய்யப்படும். விவசாயிகளிடம் இருந்து பன்னீர் கரும்பை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்று சில்லறையில் விற்பனை செய்வர்.

 

கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பன்னீர் கரும்பு கொடுக்கும் நடைமுறை வழக்கத்திற்கு வந்தது. கடந்த ஆண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கியது. பன்னீர் கரும்பை அரசு கொள்முதல் செய்து வந்ததன் காரணமாக விவசாயிகளுக்கு மொத்தமாக பணம் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர். இதை நம்பி பன்னீர் கரும்பு விவசாயிகள் தங்களின் சாகுபடி பரப்பளவை இந்தாண்டில் விரிவுபடுத்தியிருந்தனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வந்த நிலையில், அரசிடமிருந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பு வராததால், பன்னீர் கரும்பு விவசாயிகள் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 பணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கேட்ட பன்னீர் கரும்பு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதையடுத்து கடலூர் அருகே உள்ள குள்ளஞ்சாவடி, சமுட்டிக்குப்பம், கிருஷ்ணன்பாளையம், புலியூர், காட்டுசாகை, அம்பலவாணன்பேட்டை, கிருஷ்ணகுப்பம், கட்டியங்குப்பம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பன்னீர் கரும்பு விவசாயிகள் 400-க்கும் மேற்பட்டோர் கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குள்ளஞ்சாவடி நான்கு முனைச் சந்திப்பு அருகே ஒன்று திரண்டனர். அவர்கள் ஒரு கையில் பன்னீர் கரும்பு, மறு கையில் பூச்சி மருந்தை ஏந்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்தும்; சாலையில் இலை இல்லாமல் பரிமாறப்பட்ட உணவையும் அதனருகில் பூச்சி மருந்து பாட்டிலை வைத்தும்; கரும்புக் கட்டை படுக்கவைத்து ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

இதையடுத்து ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு சாலைமறியலில் ஈடுபட்ட பன்னீர் கரும்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அரசு பன்னீர் கரும்பை கொள்முதல் செய்யவில்லை என்றால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே, அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பை இணைத்து வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.  கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கோட்டாட்சியர் கூறியதையடுத்து, பன்னீர் கரும்பு விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கரும்பு விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் கடலூர் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.