தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடி நெல் கொள்முதல் செய்ய வேண்டும், நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் விவசாயிகளைப் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக 20க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன், திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி விவசாயிகள் புறப்பட முற்பட்டனர். அப்போது அவர்களைத் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை நெம்பர் 1 டோல்கேட் அருகே, மாருதி நகர் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த டிராக்டர்களை நடுரோட்டில் நிறுத்தி வைத்தனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் இருவழிப்பாதையை ஒருவழிப்பாதையாக மாற்றி போக்குவரத்தைச் சரி செய்தனர்.