Skip to main content

அழுகும் தக்காளிக்கு விலை கூறும் முதல்வர் பழனிசாமி அவர்களே, எங்களுக்குப் பதில் சொல்லுங்க..! -விவசாயிகள் கேள்வி!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

 Farmers question to tn cm

 

மத்திய பா.ஜ.க.மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளான் சட்டங்களை எதிர்த்து நாடு முழுக்க எதிர்க்கட்சிகள், விவசாயிகள் அமைப்புகள் கொந்தளித்துப் போராட்டங்களில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், மதுரை சுற்றுப் பயணத்தின் போது, இம்மசோதாவை ஆதரித்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம், பா.ஜ.க.வினரே பட்டியலிடத்தைப் பட்டியலிட்டு இந்த மசோதா விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்றார். அதற்கு அவர் கூறிய எடுத்துக்காட்டு கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுடன் ஒப்பந்தம் போடுவது போல என்று கூறி, அதில் தக்காளியையும் உதராணம் காட்டினார். இதற்கு எதிர் விளைவாக விவசாயிகளிடமிருந்து கோபக் குரல் எதிரொளிக்கிறது.

 

 Farmers question to tn cm


"கரும்பு ஆலைகளுடன் ஒப்பந்தம் போட்டு கரும்பு பயிர் செய்த விவசாயிகளுக்கு இதுவரை சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 1,800 கோடியை  வாங்கித் தர வக்கற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒப்பந்த முறை விவசாயம் பற்றி ஓதுவது, பேசுவது கேலிக் கூத்தானது..." எனக் கடுமையாகக் கொதிக்கிறார்கள் ஈரோடு மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள்.

 

 Farmers question to tn cm


தற்சார்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கி.வே. பொன்னையன் மற்றும் கீழ்பவானி விவசாயிகள் சங்க தலைவர் செ. நல்லசாமி, தமிழக விவசாயிகள் சங்கம் (கே.சி.) ஈரோடு மாவட்டச் செயலாளர் சுப்பு ஆகியோர் நம்மிடம் பேசுகையில்,

"தமிழகத்திலுள்ள 40 க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகளோடு ஒப்பந்த முறையில்தான் கரும்பு விவசாயிகள் பயிர் செய்து, அரசு தீர்மானித்த விலைக்கு ஆலைகளுக்கு கொடுக்கின்றோம். கரும்பு அறுவடை முடிந்த 15 நாளில் விவசாயிகளுக்கு கொள்முதலுக்கான பணத்தை ஆலைகள் கொடுக்க வேண்டும். தவறினால் 15 சதவீதம் வட்டி போட்டுக் கொடுக்க வேண்டும். இதுதான் ஒப்பந்த முறை. ஆனால் கரும்பு பணத்தை விவசாயிகளுக்கு தராமல் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 1,800 கோடி நிலுவை வைத்துள்ளனர் சர்கரை ஆலை நிர்வாகங்கள். 

இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு சர்கரை ஆலைகள் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை எவ்வளவு தெரியுமா?  ரூபாய் 15,000 கோடியாகும். இதில் உத்திரபிரதேசத்தில் மட்டுமே நிலுவை தொகை ரூபாய் 12,000 கோடி. இது 1966 ஆம் ஆண்டு சர்க்கரைக் கட்டுப்பாட்டுச் சட்டப்படி தான், இந்த ஒப்பந்தம் உள்ளது. அப்படித்தான்  விவசாயத்தில் ஈடுபட்டோம். அந்தச் சட்டப்படி வருவாய் மீட்பு சட்டத்தைப் பயன்படுத்தி (Revenue Recovery Act)  ஒவ்வொரு மாவட்ட அரசு நிர்வாகமும் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பணம் தரவில்லை என்றால் சர்க்கரை ஆலைகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்யலாம் என உள்ளது.

ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட நிர்வாகத்திடம் அதாவது கலெக்டரிடம் முறையிட்டோம். பல வடிவங்களில் போராடி விவசாயிகள் துயரை அரசுக்கு எடுத்துச் சொன்னோம். மாவட்ட அமைச்சர்களை நேரில் சந்தித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒப்பந்தப்படி எந்த சர்கரை ஆலை மீதும் நடவடிக்கை இல்லை. ஆம்  இன்னும் பணம் வந்து சேரவில்லை. இப்படி ஒரு பயிருக்கே ஒப்பந்தப்படி பணம் பெற்றுத்தராத இந்த அரசு, எல்லா விளை பொருளுக்கும் கம்பெனிகளிடம் பணம் வாங்கிக் கொடுப்பது சாத்தியமே இல்லாத ஒன்றாகும்.
 

இப்பொழுது அரசே முறையாக நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளுக்கு பெருத்த நட்டம் ஏற்பட்டு வருகிறது. இப்படியிருக்க தமிழக முதல்வர் அவரது வாய் இனிக்க, இனிக்க பேசுகிறார். "கம்பெனிகள் தக்காளி கிலோ ரூபாய் 40 க்கு ஒப்பந்தம் செய்து விளைச்சலின்போது சந்தைவிலை ரூபாய் 30 என்று இருந்தாலும் ஒப்பந்தப்படி கிலோ ரூபாய் 40 க்கே கொள்முதல் செய்வார்களாம்." அடேங்கப்பா அந்த கம்பெனி ரூபாய் 10 நட்டமடையுமாம்... என்ன வேடிக்கை? 

 

 Farmers question to tn cm

 

நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்று வாய் கூசாமல் எடப்பாடி பழனிசாமி இப்படி கூறுவது விவசாயிகனின் தலையில் கல்லைப் போடுவதற்குச் சமம். ஒட்டு மொத்த விவசாயிகளும் முதல்வரிடம் கேட்பது மிக இலாபம் ஈட்டும் நிலையிலேயே சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு ஒப்பந்தப்படி பணம்கொடுக்காமல் உள்ளனர்.

தற்போது உள்ள சட்டப்படியே நடவடிக்கை எடுக்காத இந்த அரசுகள் அழுகும் தக்காளிக்கு கம்பெனிகளிடம் பணம் வாங்கித்தரும் என்பது மோசடியான பிரச்சாரமாகும். விவசாயிகள் அமைப்பாக இல்லை. ஒப்பந்தம் செய்யும் பெரு நிறுவனங்கள் பெரிய கட்டமைப்பை வைத்துள்ளது. இன்றைய சந்தை முறையிலேயே பலன் பெற முடியாத விவசாயிகள் கார்பரேட் சந்தையில் பயன் பெறுவது நடக்காத ஒன்றாகும். அதற்காக தான் திரும்ப கூறுகிறோம் தமிழக முதல்வர் திரும்ப, திரும்ப விவசாயி எனக் கூறிக்கொண்டு வேளாண்துறையை கார்பரேட்களுக்கு காவு கொடுப்பது வரலாற்றில் பெரும் துரோகமாகவே மாறும். விவசாயிகள் சங்கம் யாரும் முதல்வர் சொல்வது போல கோரிக்கை எதையும் வைக்கவேயில்லை. அப்படியிருக்க இது விவசாயிகள் மீது திணிக்கப்படுகிறது.

 

Ad


மூன்று வேளாண் பகை சட்டங்களும் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் அழித்து விடும். எனவே இது ஒரு மாபெரும் சமூகப் பிரச்சனையாக உருவெடுக்கும்..." என்றனர்.

கரும்பு என்ற ஒரு விவசாயப் பயிருக்கே ஒப்பந்தம் போட்ட விவசாயிக்கு கரும்பு ஆலைகள் முழுமையான பணம் தராமல் ஏமாற்றி வரும் நிலையில் அதுவும் நமது ஊர் கரும்பு ஆலை முதலாளிகள் நடத்திவரும் இந்த ஆலைகளிலேயே இப்படியிருக்க, நூற்றுக்கணக்கான விவசாயப் பொருட்களுக்கு கம்பெனிகள் விலை கொடுக்கும் என ஒப்பந்தம் முறைக்கு தமிழக அ.தி.மு.க அரசு வக்காலத்து வாங்குவது ஒட்டுமொத்த விவசாயிகளையும் மத்திய பாஜக அரசு அடகு வைப்பதை ஆதரிப்பதுதான் என்பதைத் தவிர வேறென்ன?

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.