Skip to main content

"நாங்களும் போட்டியிடுவோம்ல" வேட்பாளர்களை களமிறக்கும் விவசாயசங்க அமைப்புகள்

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

நடக்க இருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக, திமுக, அ,ம,மு,க. மக்கள் நீதிமையம், நாம் தமிழர் கட்சி என அரசியல் கட்சிகள் பல அணிகளாக  களம் காண இருக்கும் நிலையில் அவர்களை மிஞ்சும் வகையில் விவசாய சங்கங்களும், பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்களும்  என பல அணிகளாக பிரிந்து ஆளுக்கு தலா 100 வேட்பாளர்களை களமிறக்கப்போகிறோம் என அறிவித்திருப்பது டெல்டா தேர்தல்களத்தில் பரபரப்பாகியுள்ளது.

 

 Farmers organizations that field candidates

 

கடந்த வாரம் நிலம் நீர் பாதுகாப்பு அமைப்பு டெல்டா மாவட்டங்களில் உள்ள தஞ்சை நாகை மயிலாடுதுறை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் தொகுதிக்கு 100 பேர் வீதம் வேட்பாளர்களை களமிறக்கி தேர்தல் களத்தை போராட்ட களமாக மாற்ற திட்டமிட்டிக்கிறோம் என முதற்கட்ட வேட்பாளர்கள் 11 பேரை மயிலாடுதுறையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

 

அதனை தொடர்ந்து தற்போது காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கமோ சில கோரிக்கைகளை துணை ஆட்சியரிடம் கொடுத்து அதை நிறைவேற்றவில்லை எனில் எங்களின் சார்பில் நூறு வேட்பாளர்களை களமிறக்கி போராட்டகளமாக மாற்றுவோம் என கூறியுள்ளனர்.

 

என்ன கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களிடமே விசாரித்தோம், " தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், போராட்டத்திற்கான அனுமதி மறுக்கப்படுகிறது. விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்ட 2017 −18 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை எந்த முறைகேடும் இல்லாமல் விரைவில் வழங்கப்பட வேண்டும். மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும், விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். கல்விக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள கரும்புக்கான தொகையை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். அரசு சர்க்கரை ஆலையான என், பி,கே,ஆர்,ஆர்  ஆலையை மீண்டும் இயக்க செய்திடவேண்டும்.  ஆறுகள் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்ற வேண்டும். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மையங்களில் தேங்கி கிடக்கின்றன இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட இருப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும்.  விவசாயிகளின் பெயரால் அரசு அறிவிக்கும் அனைத்து மானியங்களையும் ரத்து செய்து நெல் விலையை குவிண்டாலுக்கு 2,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தேர்தலுக்குள் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் விவசாயிகளை வேட்பாளர்களாக நிறுத்தி போராட்ட களமாக மாற்றுவோம் என்றனர்.

 

இதேபோல் தான் கடந்த வாரம் மயிலாடுதுறையில் நிலம் நீர் பாதுகாப்பு அமைப்பு ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்கள் நாசகார பிரச்சனையை மையமாக வைத்து, மூன்று தொகுதிகளிலும் 300 வேட்பாளர்களை இறக்கி தேர்தலை போராட்டக் களமாக மாற்றுவோம், அதன்மூலம் விழிப்புணர்வு அடைய செய்வோம் என வேட்பாளர்களை அறிவித்தனர்.

 

 இந்த அறிவிப்புகள் அரசியல் கட்சிகளை அதிர்ச்சியடையவே வைத்திருக்கிறது.

 

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மற்ற தொகுதிகளை விட டெல்டா மாவட்ட தொகுதிகளில் விவசாய,மீனவ பிரச்சனையே பிரதானமாக இருக்கும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.