Skip to main content

அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற குறை கேட்புக் கூட்டம்; விவசாயிகள் வெளிநடப்பு  

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

farmers meeting in virudhachalam sub collector office issue 

 

ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொள்வார்கள். கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக விவசாயிகள் முன்வைக்கும் கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் அதிகாரிகள் பதில் கூறுவார்கள். மேலும் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் மாவட்ட தலைநகருக்கு வந்து செல்வதால் கால விரயமும் நேர விரயமும் பொருளாதார விரயமும் ஏற்படும். இவற்றைத் தவிர்க்கும் பொருட்டும் விவசாயிகள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்வு காண ஏதுவாகவும் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது திங்கள் கிழமைகளில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இரண்டாவது திங்கள் கிழமை கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடைபெறும் எனவும், மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமான விவசாயிகள் குறை கேட்புக் கூட்டமும் நடைபெறும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

 

அதையடுத்து மார்ச் மாதத்தின் முதல் திங்கள் கிழமையான கடந்த வார திங்கட்கிழமையன்று மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு அவரவர் பகுதி விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கி கூறினர். இந்நிலையில் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையான இன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் விருத்தாசலம், சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகங்களிலும் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் கோட்டாட்சியர் லூர்துசாமி தலைமையில் நடைபெற்றது.

 

இதில் கலந்து கொள்வதற்காக விவசாய சங்கப் பிரதிநிதிகள்,  விவசாயிகள், பொதுமக்கள் பலரும் வருகை தந்தனர். விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் சார்-ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலேயே இருக்கைகள் போடப்பட்டு அதில் விவசாயிகள் ஒரு பக்கமும் அதிகாரிகள் இன்னொரு பக்கமும் அமர வைக்கப்பட்டனர். விவசாயிகள் அதிகாரிகளை நேருக்கு நேர் பார்த்து பேச முடியாதபடி உட்புறமாக உட்கார்ந்து இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், " சார் ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்லக்கூடிய வாசற்படியில்  அமர வைத்து எதற்காக கூட்டம் நடத்துகிறீர்கள்?" என அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்தும், போதிய இட வசதி இல்லாமல்  விவசாயிகளை அவமதிக்கின்ற வகையில் செயல்படும் அதிகாரிகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய படி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

farmers meeting in virudhachalam sub collector office issue 

பின்னர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குறைகளைக் கூறுவதற்காகக் கூட்டத்திற்கு வந்தால், அவர்களை இழிவுபடுத்தும் விதமாகச் செயல்படும் மாவட்ட நிர்வாகத்தின் அராஜக போக்கை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். விவசாயிகள் திடீரென்று கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேசமயம் விவசாயிகளின் போராட்டத்திற்குப் பிறகு சார் ஆட்சியர் அலுவலக மாடியில் உள்ள கூட்ட அரங்கை சுத்தப்படுத்தி அங்கு சிறிது நேரத்திற்குப் பிறகு கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் விவசாயிகள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை. அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.