Skip to main content

“தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மை கொள்கை அறிவிக்க வேண்டும்” - உயிர்ம வேளாண் கொள்கை மாநாட்டில் கோரிக்கை! 

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

Farmers meeting

 

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த பெண்ணாடத்தில் தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்க கோரி தமிழர் மரபு வேளாண்மை மாநாடு நடைபெற்றது. செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் கரும்பு கண்ணதாசன் தலைமையில், தமிழக உழவர் முன்னணி தலைவர் சி. ஆறுமுகம் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். தமிழக உழவர் முன்னணி தி.வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் கி.வெங்கட்ராமன் மாநாட்டின் நோக்கங்களை விளக்கி அறிமுகவுரையாற்றினார். 

 

இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் செயல்படும் நீடித்த வேளாண்மை மையத்தின் செயல் இயக்குநரும், தெலுங்கானா – ஆந்திரா மாநிலங்களில் 35 லட்சம் ஏக்கர் பரப்பில் சிறு விவசாயிகளை ஒருங்கிணைத்து இயற்கை வேளாண்மை செய்து வருபவருமான முனைவர் ஜி.பி.இராமாஞ்சநேயலுக்கு, நீடித்த வேளாண்மைக்கும் உழவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் அவர் ஆற்றியுள்ள பணிகளை பாராட்டி காந்திய பொருளாதார அறிஞர் “ஜே.சி.குமரப்பா நினைவு விருது” வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. பின்னர் மாநாட்டு சிறப்புரை நிகழ்த்தினார். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார். 

 

சுயாட்சி இந்தியா தமிழ்நாடு தலைவர் கே.பாலகிருஷ்ணன், தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாமயன், தமிழக உழவர் முன்னணி தலைமை செயற்குழு உறுப்பினர் க.முருகன், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்க ஒருங்கிணைப்பாளர் இரமேசு கருப்பையா ஆகியோர் விளக்கவுரையாற்றினர். சுயாட்சி இந்தியா கட்சியின் அனைத்திந்திய தலைவரும், தில்லி உழவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான முனைவர் யோகேந்திர யாதவ்வின் வாழ்த்துச் செய்தி காணொளி வாயிலான மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. வேளாண் பொருளியல் ஆய்வறிஞர் அரியானாவை சேர்ந்த முனைவர் தேவேந்திர் சர்மாவின் வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது.


தமிழக உழவர் முன்னணி துணைத் தலைவர் மு.தமிழ்மணி, செந்தமிழ் மரபு வேளாண்மை நடுவம் கவிஞர் சிலம்புச்செல்வி, தாளாண்மை உழவர் இயக்க க.வே.நடராசன், பழமலை மரபுவழி வேளாண் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோட்டேரி சிவக்குமார் மற்றும் க.சரவணன், ஈரோடு மாவீரன், பேராசிரியர் சௌ.காமராசு, சீர்காழி பொற்கொடி சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 


காரைக்கால் பாஸ்கரின் மரபு விதைக் களஞ்சியம், தமிழர் மரபு உணவுத் திருவிழா, அடுப்பில்லா சமையல் செயல் விளக்கம், இயற்கை எரிவளி (பயோ கேஸ்) செயல் விளக்கம் ஆகியவை மாநாட்டில் இடம்பெற்றன. செ. கணேசன் நன்றியுரையாற்றினார். மாநாட்டு நிகழ்ச்சிகளை மா.மணிமாறன், சி. பிரகாசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 


மாநாட்டில் தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கையை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும், வேளாண் விளை பொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி குறைந்தபட்ச இலாப விலையை அடிப்படை விலையாக அறிவித்து சட்டமியற்ற வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்தியும் தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் உள்ளதை பின்பற்றி தமிழ்நாட்டில் உழவர்களுக்கு ஏக்கருக்கு 12,000 ரூபாய் வீதம் நேரடி வருவாய்த் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


மாநாட்டில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் உழவர்களும், இயற்கை வேளாண்மை ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்றனர்.


பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் கி.வெங்கட்ராமன், "உயிர்ம வேளாண்மை மாநாட்டின் நோக்கம் நமக்கு அண்டை மாநிலமாக  இருக்கின்ற ஆந்திரா, கேரளா அரசுகளை போல தமிழ்நாடு அரசும் உயிர்மை வேளாண்மையை பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும், இயற்கை வேளாண்மையில் விளையக்கூடிய விளைபொருள்களுக்கு, லாபகரமான விலை கிடைக்க சிறப்பு ஏற்பாடு செய்யவும் வேண்டுமென்பதற்கான சிறப்பு கொள்கையை அறிவிக்க வேண்டும், இயற்கை வேளாண்மையை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும். அச்சட்டம் செயல்படுவதற்கு வாரியம் அமைக்க வேண்டும். ஒன்றிய அளவில் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான்" எனக் கூறினார்.

 
ஆந்திர பிரதேச வேளாண் அறிவியலாளர் இராமாஞ்சநேயலு கூறும்போது, "ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள உழவர்களை திரட்டி இயற்கை வேளாண்மை பயிற்சி கொடுத்து கிட்டத்தட்ட 2024லிருந்து 2026க்குள் எல்லா மாநிலங்களிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறுவது என்ற முறையில் திட்டமிடப்பட்டுள்ளது.  தெலுங்கானாவும் அதற்கான உதவி செய்து வருகிறார்கள். சிக்கிம் முற்றிலுமாக இயற்கை வேளாண்மை மாநிலமாக மாறி உள்ளது. இப்படி மாறுவதுதான் உழவர்கள் நஞ்சு இல்லாத உணவு, லாபகரமான விளைபொருளுக்கான விலை இதை நோக்கி நகர்ந்து வருகிறோம். இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக ஆந்திரா போன்ற அரசாங்கங்கள் ஆதரவு தருகிறார்கள். இது போதாது, இந்தியா முழுவதும் விரிவாக்க வேண்டும், நகர்புறத்தில் உள்ள நுகர்வோர்களை ஒரு கூட்டுறவாக உருவாக்கி, உழவர்களை நேரடியாக இணைப்பதற்கான வழிமுறையை செய்து வருகிறோம். மக்களுக்கு நஞ்சில்லாத உணவு கிடைக்கிறது. வேளாண்மை ஒரு லாபகரமான தொழிலாக உழவர்களுக்கு மாறுகிறது. இதை எல்லோரும் பின்பற்ற வேண்டும். இந்திய அரசாங்கமும் உதவி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு நேரடியான வருமானம் என்பதை பரவலாக்க வேண்டும். இந்தக் கொள்கை அறிவிப்புகளை இந்திய அரசின் கொள்கை அறிவிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக உழவர்களை ஒன்றிணைக்கிறோம்"  என்றார்.


முன்னதாக உழவர் போராளி தூருவாசன் மற்றும் டெல்லி உழவர் போராட்ட ஈகியர் படத்திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரைப்பட பாடலாசிரியர் கவிபாஸ்கரின் கவிவீச்சும், பெண்ணாடம் திருவள்ளுவர் கலைக்குழுவினரின் பறை இசையும் நடைபெற்றன. மேலும் மரபு வழி வேளாண்மை, இயற்கை விவசாயம் குறித்த நூல்கள், மரபுவழி விதைகள், மரபு வழியிலான உணவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.