Skip to main content

''10 மாவட்டங்களில் உழவர் சந்தைகள்...'' - வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

'' Farmers' markets in 10 districts ... '' - Agriculture Budget Announcements

 

தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக நேற்று (13.08.2021) இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் தொடங்கியது.

 

பொது நிதிநிலை அறிக்கையைத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்திருந்த நிலையில், தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக வேளாண்துறை பட்ஜெட்டை வேளாண்துறை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

 

அப்போது வேளாண் பட்ஜெட் உரையைத் தொடங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "வேளாண் மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் வேளாண் - உழவர் நலத்துறை என பெயர் மாற்றப்பட வைத்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்தப் பட்ஜெட்டைக் காணிக்கையாக்குகிறேன். நிச்சயமில்லாத வாழ்க்கையிலிருந்து நிம்மதியான வாழ்க்கைக்குக் கொண்டு சேர்த்தது வேளாண்மையே. விவசாயிகளிடம் கருத்து கேட்ட பின்னரே இந்தப் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, கோவை, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தேன். விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக ஆவதால் சாகுபடி பரப்பு குறைந்துவருகிறது. மக்களாட்சிக்கு விரோதமாக தனித்து முடிவெடுத்து செயல்படுத்தும் போக்கைத் தமிழக அரசு கடைப்பிடிக்காது. 

 

கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் சாகுபடி செய்து, தமிழகத்தின் நிகர சாகுபடி பரப்பை, 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். உணவு தன்னிறைவை தமிழகம் ஓரளவு எட்டிவிட்டது. இருபோக சாகுபடி பரப்பை, அடுத்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். வேளாண்துறையில் இளைஞர்கள் வேலைத் தருவோராக மாறும்போதுதான் முன்னேற்றம் முயல் வேகத்தில் நடக்கும். ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் திட்டத்தில் முதற்கட்டமாக 2,500 இளைஞர்களுக்குப் பயிற்சி  வழங்கப்படும். பதியன்போடுதல், கவாத்து, நுண்ணுயிர் பாசன அமைப்பு பராமரித்தல் போன்ற பயிற்சிக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மானாவாரி நிலத்தொகுப்பில் பயன்பெறும் மரங்களை வளர்ப்பதற்கு நிதியுதவி வழங்கப்படும். பண்ணை இயந்திர வாடகை மையங்கள், மதிப்பு கூட்டு இயந்திர மையங்களை உருவாக்க நிதியுதவி வழங்கப்படும். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு 146.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழப்பயிர் சாகுபடிக்கு 29.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலகு ரக சரக்கு வாகனங்கள் வாங்கும் திட்டத்திற்கு 21.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

வேளாண்மைத்துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படும். 2021 - 22 ஆண்டுகளில் பயிர் காப்பீடு திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த 2,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பனைமரத்தின் பரப்பு வெகுவாக குறைந்துவருவதால் அதை அதிகரிக்க மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும். ஒரு குவிண்டால் நெல் சன்ன ரகதிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 100 ரூபாயாகவும், சாதாரண ரகத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 75 ரூபாயாகவும் உயர்த்தப்படும். ஒரு குவிண்டால் நெல் சன்ன ரகம் 2,060 ரூபாய்க்கும், சாதாரண ரகம் 2,015 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும். மழையில் நெல் மூட்டைகள் நனைவதைத் தடுக்க 52.02 கோடியில் விவசாயிகளுக்குத் தார்பாய்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மின்சாரம் தர மின்வாரியத்திற்கு 4,508.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சூரிய சக்தியால் இயங்கும் 5,000 பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் நடப்பு ஆண்டில் நிறுவப்படும். காய்கறி, கீரை சாகுபடியைப் பெருக்க மானியம் அளிக்கும் திட்டம் 95 கோடியில் செயல்படுத்தப்படும்.

 

உழவர்களுக்கு வேளாண் கருவிகள் தர 15 கோடி ரூபாய் செலவில் வேளாண் உபகரணங்கள் தொகுப்பு செயல்படுத்தப்படும். வைட்டமின்-சி பெட்டகம் என்றழைக்கப்படும் நெல்லி, 200 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படும். மூலிகைச் செடிகள், நெல்லிக்காய்கள் தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணை மற்றும் மூலிகை மருந்து நிறுவனத்திற்கு வழங்கப்படும். மூலிகைச் செடிகளைப் பெருக்கும் திட்டம் 2.18 கோடி செலவில் செயல்படுத்தப்படும். வேளாண் பட்டதாரிகளைத் தொழில்முனைவோர் ஆக்குதலில் அரசு தீவிர கவனம் செலுத்தும். அடுத்த தலைமுறைக்கு கணினியைப் பற்றி தெரியும் அளவிற்கு கழனியைப் பற்றி தெரியவில்லை. கடலூர் மாவட்டம் வடலூரில் 1 கோடி ரூபாயில் புதியதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும். பண்ருட்டியில் பலாவிற்கு சிறப்பு மையம் அமைக்கப்படும். 1.05 ஹெக்டரில் நுண்ணீர் பாசனத்திட்டம் 982.48 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும். நவீன முறையில் பூச்சிமருந்து தெளிக்க 4 ட்ரான் உள்ளிட்ட இயந்திரங்கள் வாங்க 23.29 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். 6 கோடியில் 10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் அமைக்கப்படும். தற்போதுள்ள 50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்து புனரமைக்க 12.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் காரவள்ளி பகுதியில் மிளகு பதப்படுத்தும் மையம் ரூபாய் 50 லட்சத்தில் அமைக்கப்படும்'' என தொடர்ந்து வாசித்துவருகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Release of special election report

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிதம்பரத்தில் உள்ள ஜெயங்கொண்டபட்டிணம் என்ற இடத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார். இதனை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த தேர்தல் அறிக்கையில், “வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும். டாகர்.அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்கப்பட வலியுறுத்தப்படும்.

இந்திய தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை பிரச்சனையில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்க நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். தமிழக ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கக் கூடாது. மின்னணு வாக்கு எந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.

பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி அமைக்கப்படும். உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழை அறிவிக்க வேண்டும். பாசிச சக்திகளை அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். இந்துத்துவ சக்திகளால் பாதிக்கபட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை விசிக மேற்கொள்ளும். காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படக் கூடாது.

ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். ராமர் கோயில் திறப்பு விழா நடந்துள்ள நிலையில் நீதிமன்ற ஆனைப்படி மசூதிக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை அவசியம் எடுக்கப்படும். மத்திய மற்றும் மாநில அளவில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் பொது மக்களும் பங்கேற்கும் வகையில் அதற்கான கண்காணிப்புக் குழுவையும் உருவாக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“சின்னத்தை முடக்க முயற்சிப்பது மோடியின் மோடி மஸ்தான் வேலை” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister MRK Panneerselvam criticized BJP

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து சிதம்பரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள லால்புரம் என்ற இடத்தில் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை(28.4.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள இடத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம், மேடை அமைந்துள்ள பகுதி, தொண்டர்கள் அமர உள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது மேடை அமைக்கும் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் உள்ளிட்டோரை ஆதரித்து சிதம்பரத்தை அடுத்த புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட லால்புரம் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் வாக்காளர்கள், பொதுமக்கள், தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். மாநாடு போன்று இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். 3 ஆண்டு காலத்தில் செய்துள்ள சாதனைகள், பணிகள் குறித்து முதல்வர் பேசி வருகிறார். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 75 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். முந்தைய தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த ஆட்சியில் தனி நபர்கள் பண பலன்களைப் பெற்றுள்ளனர். ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நேரடியாகச் செல்கிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் எந்த உலகத்திலும் இல்லை. பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை என அனைத்து உதவிகளும் நேரடியாக பயனாளிகளுக்குச் செல்கிறது.

திமுக கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை முடக்குவதன் மூலமாக அவர்களது வெற்றியை தடுக்க முயற்சிக்கின்றனர். இது மோடியின் மோடி மஸ்தான் வேலை. இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு செய்கின்ற வேலை. இந்த ஆட்சி இ.டி., சி.பி.ஐ போன்றவற்றை வைத்துக் கொண்டு ஆட்சி புரிகின்றார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை செய்து விட்டு, அதை முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் சக்தியாக ஒன்று திரண்டு வெற்றி பெறச் செய்வார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியை உயர்த்தியது அவரது பயத்தை காட்டுகிறது. இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திரண்டு வந்து திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்” எனக் கூறினார்.