திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கிறது கோணியம்பட்டி கிராமம். இங்கு உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த அரசு தொடக்க பள்ளியில் பெரும்பாலும் விவசாய தொழிலாளர்களின் குழந்தைகள் தான் படிக்கின்றனர். தங்கள் குழந்தையின் கல்வி தரத்தை மேம்படுத்த நினைத்த இக்கிராம மக்கள், தரையில் அமர்ந்து படிக்கும் தங்கள் குழந்தைகள் தனியார் பள்ளிகளை போல் இருக்கையில் அமர்ந்து படிக்க வேண்டும் என முடிவெடுத்தனர். அதன்படி ஊர்கூடி முடிவெடுத்த கோணியம்பட்டி கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை சீராக வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

farmers help government school

Advertisment

Advertisment

இதன்படி பள்ளி மாணவ மாணவிகளுக்கு டேபிள், சேர்கள், நோட்டு புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் அனைத்தும் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை திரட்டி அரசு தொடக்கப்பள்ளி சீர் வரிசையாக எடுத்து வந்தனர். கோணியம்பட்டி கிராமத்தில் உள்ள வீதிகளில் மேளம் முழங்க கல்வி உபகரணங்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து மன மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வழங்கினர். பள்ளிக்கு வந்த கிராம மக்களை வட்டார கல்வி அலுவலர்கள் எஸ்தர் ராஜம், அங்கையற்கண்ணி, மகேஸ்வரி, தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி, மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

விவசாய கூலி வேலைக்கு செல்லும் இக்கிராம மக்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக ரூபாய் 1லட்சம் மதிப்பிலான பொருட்களை திரட்டி சீர் கொண்டுவந்தது கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருந்தது.