Skip to main content

“விவசாயிகளின் கோரிக்கை முதல்வரிடம் கொண்டுசெல்லப்படும்” - அமைச்சர் கே.என்.நேரு உறுதி!

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

"Farmers' demand will be taken to the chiefMinister" - Minister KN Nehru assured!

 

போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

இதில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு உறுதிமொழியை வாசிக்க மற்றவர்கள் தொடர்ந்து உறுதிமொழி வாசித்து ஏற்றுக்கொண்டனர். நிகழ்வில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், இனிகோ இருதயராஜ், அப்துல்சமது, மாநகராட்சி மேயர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் பரதநாட்டியம், விழிப்புணர்வு பாடல் மற்றும் காவல் துறையில் சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு, “போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக முதல்வர் உருவாக்கியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு போதைப் பொருட்களை ஒழிப்பது தொடர்பாக தகவல்களை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு பேரணி போன்றவை நடத்தப்பட உள்ளது. காவல்துறை, மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்லூரிகள் இணைந்து போதைப் பொருட்களை தடுப்பதற்காக கூட்டு முயற்சியில் ஈடுபடும்போது கண்டிப்பாக இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

 

திருச்சியில் பத்தாண்டுகளாக சாலைகளே போடாமல் இருந்தது. ஆனால், பல்வேறு இடங்களில் நாங்கள் சரி செய்வதற்காக பழைய சாலையை தோண்டி புது சாலைகளை உருவாக்கி வருகிறோம். சாலை சீரமைப்பு பணிகள் முடிவடையும் வரை பல இடங்களில் சாலைகள் முன்னுக்கு பின் இருப்பது உண்மைதான்.

 

தமிழகத்தில் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு மினி விளையாட்டு அரங்கை உருவாக்க உள்ளதாக தமிழக முதல்வர் நேற்று அறிவித்துள்ளார். திருச்சி கள்ளிக்குடியில் உருவாக்கப்பட்ட மார்கெட் வளாகம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனை நெல் கொள்முதல் நிலையமாக மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை முன் வைத்துள்ளனர். இதனை பரிசீலனை செய்வோம். இதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.

Next Story

“மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோவுக்கு வாக்களியுங்கள்” - அமைச்சர் கே.என்.நேரு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vote for Durai Vaiko for good governance in Madhya Pradesh Minister KN Nehru

திருச்சி பாராளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரைவைகோ, நேற்று காலை ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சித்தாநத்தத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.  தொடர்ந்து சமுத்திரம், மறவனுார், கண்ணுடையான்பட்டி, முத்தப்புடையான்பட்டி, மொண்டிப்பட்டி, பெரியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், மாலை ஸ்ரீரங்கம் மேலுார், மூலத்தோப்பு, வடக்குவாசல், கீழவாசல், அம்பேத்கர்நகர், நெல்சன் ரோடு மற்றும் அந்தநல்லுார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலும் நேற்று வீதி, வீதியாக ஓட்டு சேகரித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு, பொதுமக்களிடையே ஓட்டு சேகரித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில்,‘‘துரை வைகோ எம்பியாக வெற்றி பெற்றால் மத்திய அரசில் இருந்து அனைத்து நன்மைகளும் திருச்சிக்கு கிடைக்கும். இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மணப்பாறை சிப்காட் உணவுப்பூங்கா, பாதுகாப்பு தளவாட தொழிற்சாலை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போதுள்ள மத்திய அரசு உதவ மறுப்பதால் இத்திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை. ஐஎன்டிஐஏ கூட்டணி வெற்றி பெற்றால், இந்த திட்டங்கள் நமக்கு வந்து சேரும். பாஜ அரசு 100 நாள் வேலை திட்டத்தை 30 நாளாக குறைத்துவிட்டது. எனவே, மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோ வெற்றி பெற, தீப்பெட்டி சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்’’, என்றார்.

பிரச்சாரத்தில் வேட்பாளர் துரை வைகோ பேசுகையில்,‘‘இந்த தேர்தல் டில்லியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், வரக்கூடாது என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். ஸ்ரீரங்கத்துக்கு உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நான் வெற்றி பெற்றால், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவேன். கடந்த 3 ஆண்டுகளில் ஸ்ரீரங்கம் நகரத்துக்கு தேவையான புதிய பஸ் நிலையம், புதிய சாலைகள், ரூ.138 கோடி செலவில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரியின் குறுக்கே புதிய பாலம் திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை முழுமையாக வழங்காததால் மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ராகுல் காந்தி பிரதமர் ஆனால்  தமிழகத்திற்கு உரிய நிதி கிடைக்கும். அதன்மூலம் ஸ்ரீரங்கம் உட்பட தமிழகத்திற்கான நிதியை பெற்று திட்டங்களை செயல்படுத்தலாம். கல்விக் கடன், பயிர்க்கடன் ரத்து என பல்வேறு வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி வாக்குறுதிகளாக அளித்துள்ளது. எளிய மக்கள் எளிதில் அணுகும் எளிமையான எம்பியாக, தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எம்பியாக, ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் குரலாக லோக்சபாவில் ஒலித்து சிறந்த எம்பியாக செயல்படுவேன். அதற்கு எனக்கு ‘தீப்பெட்டி’ சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்’’ என்றார்.

பிரச்சாரத்தில், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ பழனியாண்டி, மேயர் அன்பழகன், பகுதி செயலாளர் ராம்குமார், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்ட திமுக, மதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.