Skip to main content

கொள்ளையடிக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள்! விவசாயிகள் குற்றச்சாட்டு!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019


 

டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதிலும், கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனடியாக பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
 

டெல்டா மாவட்ட பாசனத்திற்கு குறித்த காலத்தில் மேட்டூர் அணை திறக்காததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பான சாகுபடி அளவை எட்ட முடியாத நிலையே கடந்த 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.  2018 சம்பா பருவத்திலும் இதே நிலமையே நீடித்தது, மழைநீரைக்கொண்டும், கிடைத்த ஆற்றுநீரைக்கொண்டும் தாமதமாகவே சாகுபடி செய்திருந்தனர்.
 

 கஜா புயலால் நெற்பயிர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு, எஞ்சிய பயிர்கள் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. இயல்புக்கு மாறாகவே, மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.  ஜனவரி 9ஆம் தேதி திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நாகை மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

 

 இந்த நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உரிய தொகையை தாமதமாக வழங்குவதாகவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் இழுத்தடிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். நெல் கொள்முதல் பணியில் உள்ள ஊழியர்களோ கிலோவுக்கு ஒரு ரூபாய் வீதம் எடை போடுவதற்கு முன்பாகவே கேட்கின்றனர், கொடுப்பவர்களுக்கே முன்னுரிமை அளித்துவருவதாக விவசாயிகள் வேதனை அடைகிறார்கள்.
 

இதுகுறித்து நாகை மாவட்ட விவசாய சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், "கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் தொகையை செலுத்தாததால் எங்களுக்கு பெரும் பணத்தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொள்முதல் நிலையம் ஒவ்வொன்றிலும் நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 800 சிப்பம் நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன. இன்னும் கூடுதலாக நாளொன்றுக்கு ஆயிரம் சிப்பங்களாக கொள்முதல் செய்ய வேண்டும்" என்கிறார்.


 

Rice


அவரே மேலும்," நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றுபவர்கள் எடை வைப்பதற்கு முன்பாகவே பணம் வாங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. ஏனென்றால் அவர்களும் கையூட்டு பெற்றுக்கொண்டு அதற்கு அனுமதி அளிக்கின்றனர். மூட்டைக்கு ஒரு ரூபாய் 60 பைசா மட்டும்தான் நெல் கொள்முதல் செய்ய கூலியாக அரசு கொடுக்கிறது. அது போதாததால் எங்கள் நெல்லில் கையை வைக்கிறார்கள். இது அரசு செய்யும் மிகப்பெரிய தவறு. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சன்ன ரக நெல்லுக்கு 1840ம் நெல்லுக்கு 1,800 ரூபாய் வீதமும் கொடுக்கப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல் ரகங்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று காயவைத்து, தூசு நீக்கி சுத்தப்படுத்தி வழங்குகிறோம். இத்தகைய சூழ்நிலையிலும் கொள்முதல் நிலையங்களில் உள்ள பணியாளர்கள் தாமதப்படுத்துகிறார்கள். எவ்வளவு எடை வைக்கப்படுகிறதோ கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் நெல்லை கொள்முதல் செய்கிறார்கள். அந்த தொகையை தருவதற்கு தாமதப்படுத்தி முறையிட்டால் நெல்லை எடுக்க காலதாமதம் செய்கின்றனர். மேலும் தரமற்றவையாக உள்ளன எனக் கூறி வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உரிய தொகை உடனடியாக வழங்குவதில்லை. கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் விவசாயம் செய்த விவசாயிகள் கூடுதல் சுமையை ஏற்கவேண்டிய நிலையே உள்ளது" என்கிறார்.
 

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "அவர்கள் அனைவரும் ஒரே வங்கி கணக்கு வைத்திருப்பதில்லை, வெவ்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றனர். அதோடு வங்கி ஆவணங்கள் முறையாக சரிபார்த்த பின்னரே தொகை செலுத்தப்படுகிறது. மற்றபடி தாமதம் ஆகவில்லை. குற்றங்களை கண்டு பிடிக்க தனிப்படைகள் அமைத்து குற்றங்களை தடுத்துவருகிறோம்" என்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.