Skip to main content

நிலக்கடலைக்கு குறைவான விலையை நிர்ணயித்ததால் விவசாயிகள் சாலை மறியல்!

Published on 01/04/2022 | Edited on 01/04/2022

 

Farmers block road because of lower prices for groundnuts!

 

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் மாவட்டங்களிலிருந்து, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், கம்பு, நிலக்கடலை, எள் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தற்போது நிலக்கடலை அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விற்பனைக்காக நிலக்கடலை மூட்டைகளை கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். 

 

அவ்வாறு கொண்டு வரப்படும் நிலக்கடலை மூட்டைகளுக்கு, உள்ளூர் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலையை நிர்ணயம் செய்வதால், ஆத்திரமடைந்த விவசாயிகள்,  வியாபாரிகளைக் கண்டித்து ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள்  கடந்த சில நாட்களாக ஒரு மூட்டை நிலக்கடலையின் விலை 7000 முதல் 8000 ரூபாய் வரை நிர்ணயம் செய்து எடுத்துக் கொண்டிருந்த வியாபாரிகள் இன்று அனைத்து விவசாயிகளின் நிலக்கடலை  மூட்டைகளையும், முந்தைய நாட்களின் விலையை விட, 1,000 ரூபாய் குறைத்து 6,000 ரூபாய்க்கு  நிர்ணயம் செய்ததாக குற்றம் சாற்றினர். விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பி சாலைமறியலில் ஈடுபட்டனர். 

 

மேலும் உரத்தட்டுப்பாடு பிரச்சனை, மின்சார பிரச்சனை என அனைத்து இன்னல்களையும் கடந்து, ஏர் உழுதல், ஆட்கள் கூலி, வாகன வாடகை என ஏக்கருக்கு 25,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து, விற்பனைக்காக ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு கொண்டு வந்தால் உள்ளூர் வியாபாரிகள், விவசாயிகளின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் மிகவும் குறைவான விலைக்கு விளை பொருட்களை எடுத்துக் கொள்வதாகவும், சாக்கு மாற்றுவதற்கு 20,000 கமிஷன் கேட்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றர். 

 

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் விவசாயிகள் ஈடுபட்டு வந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் காவல்துறையினர் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தக்க நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என்று கூறியதின் பேரில் கலைந்து சென்றனர். 

 

விவசாயிகளின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் கடலூர்- விருத்தாச்சலம் நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.