Skip to main content

“அரசுக்கு எச்சரிக்கை விடுப்பது தவறான முன் உதாரணமாகும்” - விவசாய சங்கத்தினர்

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

farmers association said Giving a warning to the government is a wrong precedent

 

அரசுக்கு விவசாய சங்கத் தலைவர் எச்சரிக்கை விடுப்பது தவறான முன் உதாரணமாகும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து விவசாயிகளுக்கான அரசாக திகழ்கிறது. உதாரணத்திற்கு விவசாயிகளுக்கான தனி நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவாக சட்ட மசோதாவை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசு விவசாயிகளுடைய வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில் இந்த அரசு மீதும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் மீதும் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு தொகை வழங்கப்படாவிடில், விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார். எச்சரிக்கை விடுவது தவறான முன் உதாரணமாகும். அதை வன்மையாக கண்டிக்கிறோம். விவசாயிகளுக்கும், அரசுக்கும் பாலமாக விவசாய சங்கங்கள் செயல்பட வேண்டும். ஆனால் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஏதோ எதிரியை போன்று அரசை குறை சொல்லி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த போக்கு ஒட்டு மொத்த விவசாயிகளுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அரசின் திட்டங்களை, விவசாயிகள் சங்கங்கள் விவசாயிகளிடம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட வேண்டும். தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. பி.ஆர்.பாண்டியன் விவசாயிகள் நலனின் அக்கறை செலுத்த வேண்டும். எதற்கெடுத்தாலும் அரசுக்கு எதிராக குற்றம் சாட்டுவது நல்ல அணுகுமுறை இல்லை. பி.ஆர்.பாண்டியன், அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியோடு அவர் மீது பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டுகிறார். அவருக்கு பின்னால் இருந்து யாரோ இயக்குவது போல் தெரிகிறது. இந்த அரசை குறை சொல்ல வேண்டும் என்று யாரோ தூண்டிவிடுவது போல் தோன்றுகிறது. இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்