Skip to main content

நிரம்பியது வீராணம் ஏரி; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

Published on 03/06/2025 | Edited on 03/06/2025

 

Farmers are happy that Veeranam Lake is full

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியில் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, திருமுட்டம்  வட்டப்பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது. 

இதில் சென்னை குடிநீருக்கு ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக மேட்டூர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு நிரப்பப்படும். மேலும் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்தாலும் ஏரிக்கு நீர் வரத்து இருக்கும். இந்நிலையில் கடும் வெயில் மற்றும் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால் கடந்த மாதம் ஏரியின் நீர் மட்டம் 43.00 அடியாக சரிந்தது. 

Farmers are happy that Veeranam Lake is full

இந்த சூழலில் காவேரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக கீழணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீரை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தொடர்ந்து அனுப்பி வைத்தனர். இதனால் ஏரியின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. இதில் செவ்வாய் கிழமை  ஏரியின் நீர் மட்டம் முழு கொள்ளளைவான 47.50 அடியை எட்டி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏரிக்கு தற்போது  வடவாறு வழியாக விநாடிக்கு  191 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

சிதம்பரம் நீர் வளத்துறை செயற் பொறியாளர் காந்தரூபன் தலைமையில்  உதவி செயற்பொறியாளர்கள் விஜயகுமார், கொளஞ்சிநாதன், உதவி பொறியாளர் சிவராஜ், நீர்வளத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஏரியின் கரையை பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்