Farmers are happy as Veeranam lake is full

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், புவனகிரி வட்டப் பகுதிகளில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெருகிறது.

Advertisment

இதனால் இந்த வட்டப் பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏரியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கும்பகோணம் அருகே உள்ள கீழ் அணையில் தேக்கப்பட்டு அதிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏரி நிரப்பப்படும்.

Advertisment

இந்த ஏரியிலிருந்து தொடர்ந்து தண்ணீர் சென்னை குடிநீருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை மாதமாக ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும் கடும் வெயில் காரணமாகவும் தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டதாலும் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஏரி வறண்டது. சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பிடும் வகையில் தமிழக அரசு சிறப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி கடந்த மாதம் 17ம் தேதி மேட்டூரில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த மாதம் 26 ஆம் தேதி கீழணைக்கு வந்து சேர்ந்தது. அன்றே கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

வெள்ளிக்கிழமை ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி நிரம்பியது. கீழனையில் இருந்து ஏரிக்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் பாதுகாப்பை கருதி விஎன்எஸ்எஸ் வடிகால் மதகு வழியாக விநாடிக்கு150 கன அடிதண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 9 அடி ஆழம் உள்ள கீழணையில் 4.1 அடி வரை தண்ணீர் உள்ளது. ஏரி நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவசாய பாசனத்திற்கும் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment