Skip to main content

கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் மணிலா பயிர் பாதிப்பு - விவசாயிகள் வேதனை

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Farmers  agony Over 1000 acres of Manila crop damage due to heavy rains

தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களான கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (7.1.2024) மாலை முதல் திங்கள்கிழமை (8.1.2024) காலை வரை மிக கனமழை பெய்தது.

தொடர்ந்து இடைவிடாத இரவு நேரத்தில் பெய்த கனமழையால் 22 சென்டிமீட்டர் சிதம்பரம் பகுதியில் மழையின் அளவு பதிவாகியுள்ளது. இந்த மழையால் சிதம்பரம் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் வாய்க்கால்கள் வழியாக வடிந்துள்ளது. ஆனால், சிதம்பரத்திற்கு கிழக்கு பகுதியில் உள்ள கிள்ளை, தெற்கு பிச்சாவாரம், பொன்னந்திட்டு, தாண்டவராயன், சோழம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள மணிலா 1000 ஏக்கருக்கு மேலான பயிர்களின் வேர்கள் தொடர்ந்து தண்ணீர் நின்றதால், அழுகி வீணாகியுள்ளது. இதனை திங்கள்கிழமை காலை மழை சிறிது விட்டவுடன் மணிலா பயிரிட்ட விவசாயிகள் கண்ணன், சாமிதுரை, நடராஜன், ரமேஷ், சொக்கலிங்கம், பாக்கியராஜ், அருள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வயலுக்குச் சென்று மணிலா பயிர்களை பார்த்து மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்க தலைவர் கண்ணன் கூறுகையில், மணிலா பயிர் ஒரு ஏக்கருக்கு போடுவதற்கு ரூ 48 ஆயிரம் செலவாகிறது. இதில் முதல் தடவை டிசம்பர் மாதம் மணிலா பயிரை போட்ட போது, அப்போது சிதம்பரம் பகுதியில் 17 சென்டிமீட்டர் மழை தொடர்ந்து பெய்ததால் போட்ட மணிலா பயிர்கள் அனைத்தும் வீணாகியது.

இதனை ஏர் ஒட்டி விட்டு மீண்டும் தற்போது மழை இல்லை என கருதி விவசாயிகள் ஜனவரி மாதத்தில் மணிலாவை போட்டனர். தற்போது பெய்த திடீர் மழையால் 90 சதவீத மணிலா பயிர்களில் தண்ணீர் நின்றதால் அனைத்து பயிர்களின் வேர்கள் அழுகி உள்ளது. இனிமேல் அதனை ஒன்றுமே செய்ய முடியாது.  இது விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  எனவே இந்த பகுதிகளில் 1000 ஏக்கருக்கு மேல் மணிலா பயிர்கள் வீணாகி உள்ளதை மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் எனக்கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் நந்தினி கூறுகையில் விவசாயிகள் தெரிவித்தவுடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டேன். மணிலாவில் ஆங்காங்கே தண்ணீர் நிற்கிறது விவசாயிகளுக்கு தண்ணீர் வடிய வைப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இன்னும் ஒரு வாரம் கழித்து தான் பயிரின் தன்மை குறித்து கூற முடியும். பரங்கிப்பேட்டை பகுதியில் இந்த மழையால் நெல்வயல்களில் எந்த பாதிப்பும் இல்லை. ஏற்கனவே தண்ணீர் தேவையாக இருந்தது தற்போது மழையால் அது சரியாகி உள்ளது என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.