
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உ.செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி(55). விவசாயியான இவர் இன்று காலை மீன் பிடிப்பதற்காக அந்த கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கு மீன் பிடிக்கும் வலை எடுத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் மதியம் வரை வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் காசியை தேடி ஏரிக்குச் சென்றுள்ளனர்.
அப்பொழுது காசியின் ஆடைகள் ஏரிக்கரையில் இருந்த நிலையில் காசியை காணவில்லை. அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் காசி ஏரியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்ததாக கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த காசியின் உறவினர்கள் ஏரி நீரில் இறங்கி தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் ஏரியின் பல இடங்களில் சுமார் 15 அடி ஆழத்திற்கு தோண்டி மண் எடுக்கப்பட்டதால் பல இடங்களில் அதிக அளவில் ஆழம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காசியின் உறவினர்கள் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஏரியின் பல இடங்களில் டியூப் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கித் தேடிய நிலையில் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காசியின் உடலைத் தீயணைப்பு படை வீரர்கள் சடலமாக மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காசியின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சடலமாக மீட்கப்பட்ட காசியின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுததால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.